"பிரபாகரன் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்தானது தமிழ் சமூகத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும்.”


(க.கிஷாந்தன்)
“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தானது தமிழ் சமூகத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும்.”  என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாண ஹங்குராங்கெத்த எலமுல்ல கபரகல தமிழ் வித்தியாலயத்திற்கான வகுப்பறை கட்டிட தொகுதி (05.07.2019) அன்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணனால் திறந்து வைக்கப்பட்டது.
இதற்காக கல்வி அமைச்சின் மூலமாக கட்டிடத்திற்காக 12.5 மில்லியன் ரூபாவும் தளபாடங்களுக்காக 15 இலட்சமும் செலவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு 13.7 மில்லியன் ரூபா செலவில் ஆசிரியர் விடுதிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் இடம்பெற்றது.
நிகழ்வுகள் அனைத்தும் பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. இதன் போது ஹங்குராங்கெத்த வலய கல்வி பணிமனையின் அதிகாரிகள், அருகில் உள்ள பாடசாலை அதிபர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
போதைப்பொருள் விற்பனைதான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வருமானமாக இருந்தது. போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் தான் அவர் ஆயுதங்களை வாங்கிப் போர் நடத்தினார்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அறிவித்திருந்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் இராதாகிருஷ்ணன் மேலும் கூறியவை வருமாறு,
போதைப்பொருட்களை ஒழித்துக்கட்டுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். இதற்கு நாமும் முழு ஆதரவையும் வழங்க தயாராகவே இருக்கின்றோம். 
ஆனால் அவர் கடந்த வாரம் வெளியிட்ட கருத்து தான் எமக்கு மனக்கவலையை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களையும், போதைப்பொருள் வர்த்தகத்தையும் தொடர்புபடுத்தி குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து அல்ல. தமிழ் மக்களை கொச்சைப்படுத்தும் செயலாகவே பார்க்கின்றோம்.
போதையை ஒழிக்கவேண்டும் என்ற ஜனாதிபதியின் கொள்கை சரியானது. ஆனால்இ அதனை மையப்படுத்தி தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தும் விதத்தில் கருத்து வெளியிடக்கூடாது.’’ என்றார் அமைச்சர் இராதாகிருஷ்ணன்.