அக்கரைப்பற்று,பெண்ணின் வயிற்றிலிருந்த 19.5Kg கட்டி, வெட்டிஅகற்றி சாதனை


பாறுக் ஷிஹான்:

பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 19.5 Kg நிறையுள்ள கட்டியொன்றினை வெட்டி அகற்றிய சாதனையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர்கள் மேற்கொண்டு அந்த சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம்.ஜவாஹிர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (05) முதன் முறையாக இந்த சத்திர சிகிச்சையை மேற்கொண்டதாகவும், இது சுமார் 2 மணித்தியாலம் இடம்பெற்றதன் பின்னர் அந்தக்கட்டியை அகற்றினார்கள். 19.5 Kg நிறையையும் சுமார் 48CM நீளத்தையும் 34CM அகலத்தையும் 23CM உயரத்தையுமுடைய பெரும் கட்டி ஒன்றை வெட்டி அகற்றிய சாதனையை எமது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்களினால் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சத்திர சிகிச்சையை மேற்கொண்ட சத்திர சிகிச்சை நிபுணர்களான எஸ்.எஸ்.ஜமீல், பீ.கே.இரவீன்திரன், மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் வைத்திய நிபுணர் யுரேக்கா விக்ரமசிங்க, மயக்க மருந்து  வைத்திய நிபுணர் றுவான் குருப்பு, மயக்க மருந்து மற்றும் சத்திரசிகிச்சை சிரேஷ்ட வைத்தியர்கள், சத்திர சிகிச்சை கூட தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார உதவியளர்கள் உள்ளிட்ட குழுவினரால் இது முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்காக பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையின் புறச்சூழல் அழகுபடுத்தப்பட்டு சுற்றாடல் நேய செயற்றிடங்களும் அமுல் படுத்தப்படுவதாகவும் தாய் சேய் நலனிற்காக விசேட விடுதி ஒன்றும் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.