நந்திதா தாஸ் 'அழகி' அழகு பற்றி என்ன சொன்னார்?


வெள்ளைத் தோல் மீதான மோகம் குறித்தும் அழகு குறித்தும் பிபிசி '100 பெண்கள்' நிகழ்வில் பேசுகிறார் முன்னணி இந்திய நடிகையும், இயக்குநருமான நந்திதா தாஸ். தமிழில் அழகி படத்தின் மூலம் தமிழர்களுக்கு மிகவும் அறிமுகமானவர் நந்திதா.
முற்போக்கான கருத்துகளோடு திரைத்துறையில் இயங்கிவரும் நந்திதா டெல்லியில் நடந்துவரும் 100 பெண்கள் நிகழ்வில் பிபிசியின் யோகிதா லிமாயி உடன் விவாதித்து வருகிறார்.
பெண் இயக்குநர் என்று அழைக்கப்படுவது இன்று தமக்கு மிகவும் எளிதாக இருக்கிறது என்று குறிப்பிட்ட நந்திதா, பன்முகப்பட்ட, முதிர்ச்சியான உள்ளடக்கத்தைப் பெறுவதற்கு நிறைய பெண் இயக்குநர்கள் தேவை என்று அவர் தெரிவித்தார். கருப்பு நிறத்தின் மீதான அதீதப் பற்றும், ஒரு பிரச்சனைதான் என்று குறிப்பிட்ட நந்திதா, நாம் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும்.
அப்படிச் செய்தால்தான் நம்மால் உண்மையிலேயே பக்குவப்பட்ட, கருணை மிகுந்த சமூகத்தை உருவாக்க முடியும் என்று தெரிவித்தார்.
கருப்பு நிறமுள்ள நடிகர்களை சினிமா உலகம் எளிதில் ஏற்பதில்லை என்று கூறிய நந்திதா, "படித்த, மேல்தட்டு பெண்ணாக நடிப்பதற்கு என் தோல் நிறத்தை வெள்ளையாக்கிக் கொள்ளும்படி நான் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளேன். ஆனால், ஊர்ப்புற பெண்ணாக நடிக்கும்போது, நான் எவ்வளவு கருப்பாகவும், அழகாகவும் இருக்கிறேன் என்று புகழப்படுகிறேன். இந்த கருத்துகளை நாம் எப்படி உள்ளத்தில் ஏற்றிக்கொள்கிறோம். இந்த கெட்டித்தட்டிப் போன கருத்துகளை எப்படி வலுப்படுத்திக்கொள்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
கருப்பான பெண்கள் திறமையில்லாதவர்களாக இருந்தால் அவர்கள் வாழ்வது சாத்தியமா? என்று கேட்ட அவர், இதே கேள்வியை இப்போது வெள்ளைத் தோலுடைய பெண்களுக்கு கேட்டுப்பாருங்கள் என்று கூறினார்.
சில பேர் தங்களுக்கு கருப்பு நிறத்தை மிகவும் பிடிக்கும் என்று சொல்கிறார்கள். அதை ஏன் மிகவும் பிடிக்கவேண்டும். நீங்கள் நீங்களாக இருங்கள். சிலர் அதிகமாக பரிகாரம் செய்ய நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.
முடிவெடுக்கிற இடங்களுக்கு அதிகம் பெண்கள் வருவது நம் உலகை மேலும் அதிக கருணை மிக்கதாகவும், அக்கறையுள்ளதாகவும் மாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.