கோட்டாபய போட்டியிட்டே தோல்வியடைய வேண்டும்!


“கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான மனு மீதான விசாரணையின்போது மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் நான் எதனையும் கூற விரும்பவில்லை. ஆனால், அவர் ஜனாதிபதித் தேர்தலில் என்னுடன் போட்டியிட்டே தோற்க வேண்டும். இதுவே எனது விருப்பம்.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவின் இலங்கைப் பிரஜாவுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதியரசர்கள் குழாமால் நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பில் ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிடம் சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்புச் செய்தியாளர் வினவியபோதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கோட்டாபய எனக்குச் சவால் அல்ல. இதனை நான் பல தடவைகள் கூறியுள்ளேன். அதேவேளை, நானும் தனக்குச் சவால் அல்ல என்று கோட்டாபயவும் பல தடவைகள் தெரிவித்துள்ளார். ஆனால், மக்களின் வாக்குகள்தான் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கப் போகின்றன. பெரும்பாலான மக்கள் கோட்டாபயவைத் தோற்கடிக்கத் தயாராகவுள்ளனர். எனவே, அவரின் தோல்வி உறுதி என்றே நான் நம்புகின்றேன்” – என்றார்.