இந்த நாட்டில் விவசாயத்தொழிலையும் பெருந்தோட்டங்களையும் அபிவிருத்தி செய்வேன்


(க.கிஷாந்தன்)

நான் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது போல் இந்த நாட்டில் விவசாயத் தொழிலையும் பெருந்தோட்டங்களையும் அபிவிருத்தி செய்வேன். வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கட்டுப்படுத்தி உள்ளுரில் உற்பத்தியை அதிகரிப்பேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ நுவரெலியாவில் (09.11.2019) அன்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் பொழுது கூறினார்.

அங்கு தொடர்ந்து கோத்தபாய ராஜபக்ஷ உரையாற்றுகையில்,

இன்று இலங்கையில் தயாரிக்கப்படும் 'சிலோன் டீ" தரம் குறைவாக காணப்படுவதாக கூறி வெளிநாடுகளில் தகுந்த விலை கிடைக்கவில்லை. நான் ஆட்சிக்கு வந்தவுடன் தேயிலை தரத்தை உயர்த்தி 'சிலோன் டீ" யின் பிரச்சாரத்தை அனைவருக்கும் அறிய செய்து தகுந்த விலையை பெற்றுக்கொடுத்து தேயிலை தொழிலுக்கு முக்கியத்துவம் வழங்குவேன். அதே போல விவசாய துறையையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பேன்.

இந்த நாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சமுர்த்தி உதவியாளர்களுக்கு விஷேட வேலைத்திட்டம் அறிமுகம் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தையும் தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுப்பேன். விவசாயத்துறையை ஊக்குவிப்பதற்காக நல்ல விதைகளை பெற்றுக்கொடுக்கவும் இலவசமாக உரம் வகைகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.

இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை, இறப்பர், தென்னை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்வதோடு இத் தொழிலை மேற்கொள்ளும் தொழிலாளர்களுக்கும் தொழிலுக்கேற்ற ஊதியம் பெற்றுக்கொடுக்கவூம் நடவடிக்கை எடுப்பேன்.

நான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுடனும் ஸ்ரீ லங்கா சுதந்தர கட்சியுடனும் கலந்தாலோசித்தே தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளேன். அதன்படி தேர்தல் விஞ்ஞாபனத்தில் நான் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் எந்தவித தடையுமின்றி செயல்படுத்துவேன்.

நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி உட்பட பல தொழிற்சங்கங்கள் எம்மோடு இணைந்து எனது வெற்றியை உறுதிசெய்துள்ளார்கள். இந்த நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் சாந்தி, சமாதானம், ஒற்றுமையுடன் வாழ்வதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை வெற்றி பெற செய்து என்னை ஜனாதிபதியாக்குவதற்கு அனைவரும் இன மத பேதங்களை மறந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாமரை மொட்டுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.