அசாதுதீன் ஒவைசி: "நாட்டின் உண்மையான பிரச்சனை மக்கள்தொகை அல்ல, வேலைவாய்ப்பின்மைதான்"


"இந்தியாவின் உண்மையான பிரச்சனை மக்கள்தொகை கிடையாது. வேலைவாய்ப்பின்மைதான்" என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறியதற்குதான், இவ்வாறு பதில் அளித்துள்ளார் ஒவைசி.
தெலுங்கானாவில் நடைபெறவிருக்கும் நகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய ஒவைசி இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இந்தியாவின் வளர்ச்சியை உறுதிபடுத்த, இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஒவைசி, "இவ்வாறு கூறியதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும். எனக்கு இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளன. பல பாஜக தலைவர்களுக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருக்கிறார்கள். முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே ஆர்எஸ்எஸ்-க்கு இருக்கிறது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவின் உண்மையான பிரச்சனை மக்கள் தொகை கிடையாது. வேலைவாய்ப்பின்மைதான்" என்றார்.
எத்தனை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளார் ஒவைசி.
2018ல் வேலைவாய்ப்பின்மை காரணத்தினால் ஒரு நாளைக்கு 36 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாக நரேந்திர மோதியின் அரசாங்கத்தை அவர் தாக்கி பேசினார்.
"அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உங்களால் வேலைவாய்ப்பை உருவாக்கித்தர முடியாது. அதனால்தான், இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று கூறுகிறீர்கள். இந்திய மக்கள் தொகையின் 60 சதவீதம் பேர், 40 வயதிற்கு கீழ் உடையவர்கள்" என்றும் ஒவைசி தெரிவித்தார்.