மூதாட்டியை கழிவறையில் தங்க வைத்த தம்பதி


தூத்துக்குடியில் 95 வயதான மூதாட்டிக்கு சரியாக உணவு அளிக்காமல் கழிவறையில் தங்க வைத்த அவரது உறவினர்களான ஒரு தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்..
தூத்துக்குடி கோட்ஸ் நகரை சேர்ந்தவர் நிகோலஸ் (42). இவருடைய மனைவி இந்திரா (34). இவர்களின் வீட்டில் நிகோலசின் பெரியம்மாவான மரியமிக்கேல் அம்மாள் (95) என்பவர் வசித்து வந்தார்.
ஆனால், அவருக்கு சரியாக உணவு, உடைகள் கொடுக்காமலும், பராமரிக்காமலும், அவரை வீட்டில் உள்ள கழிவறையில் தங்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அதிகாரிகள் அந்த வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு மரியமிக்கேல் அம்மாள் கழிவறையில் தங்க வைக்கப்பட்டு இருந்ததும் உணவு, உடைகள் சரியாக கொடுக்காமல், அவரை பராமரிக்காமல் இருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் சமூக நலத்துறை அதிகாரி கவிதா புகார் செய்தார். அதன்பேரில், காவல்துறையினர் முதியோர் பாதுகாப்பு சட்டத்தின்படி, நிகோலஸ், அவருடைய மனைவி இந்திரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மரியமிக்கேல் அம்மாளை மீட்ட அதிகாரிகள் அவரை தூத்துக்குடியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட இந்திரா, தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய சமூக நலத்துறை அதிகாரி கவிதா "நிகோலஸுக்கும், மூதாட்டி மிக்கேலுக்கும் சண்டை ஏற்பட்டதில் தனது மனைவியுடன் சேர்ந்து கொண்டு நிக்கோலஸ், மிக்கேலை வீட்டின் வெளியே உள்ள கழிவறையில் தங்க வைத்தார்."
"கடும் குளிர், மழை, வெயில் என பார்க்காமல் மூதாட்டி மரியமிக்கேலை அந்த கழிவறையிலேயே தங்கவைத்து கொடுமை செய்து வந்துள்ளார். மேலும் அந்த கழிவறைக்கு கதவுகூட கிடையாது. அதேபோல் அந்த கழிவறையை யாராலும் பயன்படுத்த கூட முடியாத அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தது," என்று அவர் கூறினார்.
"மரியமிக்கேல் படும் துன்பத்தை பார்த்த அந்த பகுதி மக்கள், அதனை திறன்பேசியில் காணொளியாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவு செய்திருந்தனர். இதனையடுத்து மிக்கேலை மீட்டு கருணை இல்லத்தில் சேர்த்தோம்" சமூக நலத்துறை அதிகாரி கவிதா மேலும் கூறினார்.