திடீர் தீ


(கிஷாந்தன்)

அட்டன் மல்லியப்பு பகுதியில் அமைந்துள்ள பல வருடம் பழமை வாய்ந்த வாடி வீடு, திடீர் தீ விபத்தில் எரிந்து நாசமாகியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் – கொழும்பு பிரதான வீதியில், மல்லியப்பு பகுதியில் அமைந்துள்ள குறித்த விடுதியே 28.01.2020 அன்று அதிகாலை 4.15 மணியளவில் தீப்பற்றி எரிந்துள்ளது.

6 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட இந்த விடுதி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் இயங்கி வந்துள்ளது. இந்த விடுதி அவ்வப்போது வாடகைக்கு கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

அட்டன் - டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 2 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை எனவும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் அட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்