”சிந்தனை எனும் சிற்பத்தைச் செதுக்க தாய் மொழி எனும் உளியால் மட்டுமே முடியும்”


#International Mother Language Day.
சிந்தனை எனும் சிற்பத்தைச் செதுக்க தாய் மொழி எனும் உளியால் மட்டுமே முடியும்... இன்று உலக தாய் மொழி தினம்

உலகளவில் மனித சமுதாயம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடிகிறது என்றால் அதற்கு காரணம் மொழி. உலகில் பேச்சு வழக்கில், ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. இது மாவட்டம், மாநிலம், நாடு, கண்டம் என வேறுபடுகிறது. ஒவ்வொரு பகுதி மக்களுக்கும், ஒரு தாய்மொழி இருக்கும். இவற்றின் தனித்தன்மை, பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கிலும், அவற்றுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கிலும் பிப்., 21ம் தேதி, சர்வதேச தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலகில் 6 ஆயிரத்து 500 மொழிகள் உள்ளன. இதில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழ் பேசுபவை. 3 ஆயிரம் மொழிகள் பத்தாயிரம் பேருக்கும் குறைவானோர் பேசுபவை. ஆனால் தமிழ் மொழியை 7 கோடி பேர் பேசுகின்றனர். உலகில் 94 நாடுகளில் தமிழ்பேசுபவர்கள் உள்ளனர். இந்தியா பல மொழிகள் பேசும் நாடு. இதில் 74 சதவீத மக்கள் இந்திய, ஐரோப்பிய மொழிகளையும், 23 சதவீத மக்கள் தமிழை உள்ளடக்கிய திராவிட மொழியையும் பேசுகின்றனர். இருப்பினும் இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மாதம் ஒரு தாய்மொழி அழிவதாகவும், அதனை தடுக்க இந்த தினம் கொண்டாடப்படுகிறது.