பாரிய கூட்டணி அமைத்து பலமான வேட்பாளர்களையே களமிறங்குவோம்


(க.கிஷாந்தன்)

மின்சாரக் கட்டணம் எக்காரணம்கொண்டும் அதிகரிக்கப்படாது  என்று மின்வலு இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

கண்டிக்கு (21.02.2020) அன்று பயணம் மேற்கொண்டிருந்த மின்வலு இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்ற பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

அரசாங்கத்தின் நிதி அறிக்கை வாபஸ்

ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியின் போது ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் செலுத்தப்படவில்லை. அவை நிலுவையில் உள்ளன.

குறிப்பாக வங்கிக்கடன், பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கான கொடுப்பனவு என எதனையும் செய்யவேண்டாம் என இலங்கை மின்சார சபைக்குகூட கடந்த ஆட்சியில் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. இதனால் மின்சார சபையால் செலுத்த வேண்டிய கட்டணம் பல  பில்லியன் ரூபா நிலுவையில் உள்ளது.

கடந்த ஆட்சியால் கொடுப்பனவுகள் வழங்கப்படாததாலேயே நிலுவைக்சுமையை சுமக்கவேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கான கொடுப்பனவுகளை வழங்கும் நோக்கிலேயே கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இருந்தாலும் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு நெருக்கமானவர்களே ஒப்பந்தக்காரர்களாக செயற்பட்டனர். அவர்களின் சகாக்களுக்கு கட்டணம் செலுத்த நாம் முயற்சித்தோம். அதனை தடுத்துநிறுத்தியுள்ளனர். எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடைத்துவிடும்.

பலமான வேட்பாளர்கள் களத்தில்

பொதுத்தேர்தலில் பாரிய கூட்டணி அமைத்து பலமான வேட்பாளர்களையே களமிறங்குவோம். கண்டி மாவட்டத்தில் 10 பேர் போட்டியிடுவோம். எட்டு ஆசனங்களைக் கைப்பற்றுவது உறுதி.

ஐக்கிய தேசியக்கட்சி சஜித் அணி, ரணில் அணி, கரு தரப்பு என மூன்று அணிகளாக பிரிந்துள்ளன. மூன்று அணிகள்கூட தேர்தலில் போட்டியிடலாம். எனவே, மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நாம் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.

அதேவேளை, இந்த அரசாங்கம் இரண்டு மாதங்களாக என்ன செய்தது என எதிர்க்கட்சித் தலைவர் கேட்கின்றார். ஐந்து ஆண்டுகளாக அவர்கள் என்ன செய்தார்கள் என நாம் கேட்கின்றோம்."  - என்றார்.