இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் எப்படி சமாளிக்கின்றன?


மார்ச் 26ஆம் தேதிவரை தெற்காசிய பிராந்தியத்தில் 2,081 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 92 சதவீதத்தினர் இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாவர்.
தெற்காசிய பிராந்தியத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள நாடாக பாகிஸ்தான் உள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து இதே நிலைமை இல்லை. அதாவது, இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஜனவரி 30ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட நிலையில், அதற்கு 26 நாட்களுக்கு பிறகுதான் பாகிஸ்தானில் முதல் தொற்று கண்டறியப்பட்டது.
பிப்ரவரி 26ஆம் தேதி நிலவரப்படி, தெற்காசிய நாடுகளான இந்தியாவில் மூன்று பேருக்கும், பாகிஸ்தானில் இருவருக்கும், இலங்கையில் ஒருவருக்கும், நேபாளத்தில் ஒருவருக்கும் கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. எனினும், அப்போது வங்கதேசத்தில் ஒருவருக்கு கூட நோய்த்தொற்று உறுதிசெய்யப்படவில்லை.

கோவிட்-19 தொற்று (தெற்காசிய நாடுகள்)

மார்ச் 26 வரையிலான நிலவரம் (%)
தரவு: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
இருப்பினும், பிப்ரவரி 26ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர ஆரம்பித்தது. அடுத்த ஒரே வாரத்தில் இந்தியாவில் 28 பேருக்கும், பாகிஸ்தானில் 5, நேபாளம் மற்றும் இலங்கையில் தலா ஒருவருக்கும் கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.
மார்ச் 11ஆம் தேதி வரையிலான அடுத்த ஒரு வாரத்தில், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முந்தைய எண்ணிக்கையை விட 100 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்து 62ஆக உயர்ந்தது. அதே காலகட்டத்தில் பாகிஸ்தானில் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை ஐந்திலிருந்து 19ஆக அதிகரித்தது. இது 400 சதவீத உயர்வு.