தீப்பரவல்


(க.கிஷாந்தன்)

பண்டாரவளை, எல்ல பிரதேச  சபைக்குட்பட்ட பகுதியில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள குப்பை மலையில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரும், தீயணைப்பு படையினரும் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

மலைபோல் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ள, குறித்த குப்பை மேட்டில்  நேற்றிரவு (21.03.2020) 11.30 மணியளவில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டு , தீப்பரவல் வேகமாக பரவ ஆரம்பித்தது.

இது தொடர்பில் எல்ல பிரதேச சபைத் தலைவருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

சுமார் மூன்று மணிநேரம் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் தீ 90வீதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், சற்று நேரத்தின் பின்னர் மீண்டும் தீப்பரவல் ஏற்பட்டு வேகமாக பரவிவருகின்றது. இதனால் அப்பகுதி புகைமண்டலமாக காட்சியளிக்கின்றது.

எல்ல பிரதேச சபையில் தீயணைப்பு வாகனம் இன்மையால், இன்று (22.03.2020) பண்டாரவளை மற்றும் பதுளையில் இருந்து வாகனம் வரவழைக்கப்பட்டது.

பொலிஸாரும், தீயணைப்பு படையினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பற்ற நிலையிலேயே இக்குப்பை மேடு காணப்பட்டுள்ளதுடன், உக்காத பொருட்களும் அதிகளவு இருந்துள்ளன.