புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியா தேர்வு


இன்று புதிதாக 159 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மலேசியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்தத எண்ணிக்கை 2,320ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளையயில், கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்று முழுமையாகக் குணமடைந்த 61 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் முழுமையாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 320 ஆக உள்ளது.
மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு ஸ்ரீபெட்டாலிங் என்ற பகுதியில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்று முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என்று மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில் அந்நிகழ்வில் பங்கேற்ற 16,500 பேரில் சுமார் 12 ஆயிரம் பேருக்கு உரிய பரிசோதனைகள் நடத்தப்பட்டு விட்டதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. மீதமுள்ளவர்களும் தாமே முன்வந்து பரிசோதனைகளைச் செய்துகொள்ளுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர் குறைந்தபட்சம் 14 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் இஷான் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ்
வெளிநாடுகளில் இருந்து வருவர்கள் மூலம் நாட்டில் கணிசமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறளது என்பதால் இவ்விஷயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்தார்.
கிருமித் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக மலேசிய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் பிடி மேலும் இறுகும்:
இதற்கிடையே மலேசியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொதுநடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை சிலர் தொடர்ந்து மீறி வருவதை ஏற்க இயலாது என அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் அரசு ஆணையை மீறியதாக 400க்கும் மேற்பட்டோர் கைதாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் பிடி மேலும் இறுகும் என தேசிய பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பிட்ட தொழில் மற்றும் சேவைகள் இயங்கக்கூடிய கால அவகாசம் குறைக்கப்படலாம் அல்லது அவற்றின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் எனத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி ஏராளமான பகுதிகளில் வணிகம், பொதுச்சேவை, தொழில்கள் தொடர்பான இடங்களை மூடுமாறு தேசிய பாதுகாப்பு மன்றம் பரிந்துரைத்துள்ளது என்றார்.

"எனினும் ஓர் அமைச்சு மட்டும் இதுகுறித்து இறுதி முடிவெடுத்து விட இயலாது. வெவ்வேறு அமைச்சுகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். உதாரணமாக தொழிற்சாலைகள் இயங்கக்கூடிய நேரத்தை நிர்ணயிப்பது தொடர்பாக அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சுடன் கலந்தாலோசிக்க வேண்டி இருக்கும். காய்கறி உற்பத்தி தொடர வேண்டும் என விரும்புகிறோம் எனில் அதற்குத் தேவையான ரசாயனங்கள் மற்றும் உரங்கள் விற்கும் கடைகள் திறந்திருக்க வேண்டும். இதைச் செயல்படுத்தும் பட்சத்தில் நிச்சயம் நிறைய கடைகள் திறந்திருக்கும்.
"எது எப்படியாக இருந்தாலும் பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பாக எடுக்கக்கூடிய முடிவுகளால் பொதுமக்களுக்கு அதிக சிரமங்கள் ஏற்படாது என்பதை உறுதி செய்வோம்," என்றார் இஸ்மாயில் சப்ரி.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக வெளியான தகவலை இஸ்மாயில் சப்ரி திட்டவட்டமாக மறுத்தார். இதுபோன்ற வதந்திகளை நம்பவேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.
தாயகம் திரும்ப இயலாமல் தவிக்கும் 3,616 மலேசியர்கள்:
இந்நிலையில் பல்வேறு நாடுகளில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் 3,616 பேர் மலேசியக் குடிமக்கள் தவித்து வருவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. மொத்தம் 60 நாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள இவர்களை மீட்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.
கொரோனா
மார்ச் 28ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 2,612 மலேசியர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார். இவர்களில் 1,988 பேர் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டதாகவும், இதற்காக 12 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சிறப்பு விமானங்களை இயக்குவதற்கான செலவை மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது எகிப்தில் சிக்கியுள்ள மலேசியர்கள் மீட்கும் நடவடிக்கையும் துவங்கியிருப்பதாகக் கூறினார். உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் மலேசியர்கள் அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியாவை தேர்வு செய்த WHO
கோவிட் 19 கிருமித் தொற்று இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய மருந்தை சோதனை முறையில் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் மலேசியாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இத்தகவலை மலேசிய பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது. மலேசிய சுகாதார அமைச்சுக்கு இந்த ஆய்வை மேற்கொள்ளக்கூடிய திறன் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் நம்புவதால் மலேசியா அதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அம்மன்றம் கூறியுள்ளது.
கொரோனா வைரஸ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
கோவிட் 19 நோய்த்தொற்று இருக்கும் நோயாளிகளுக்கு இம்மருந்தைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் என்றும், அதன்மூலம் அம்மருந்தின் பக்க விளைவுகள் மற்றும் செயல்திறன் கண்காணிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் இப்புதிய மருந்தைக் கொண்டு சோதனை அடிப்படையில் பல நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான சிறந்த மருந்தைக் கண்டறிவதில் உலக சுகாதார நிறுவனம் முனைப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அமெரிக்கா, இங்கிலாந்தில் இருந்து மலேசியர்கள் நாடு திரும்புவது நல்லது"
அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் உள்ள மலேசியர்கள் மிக விரைவில் தாயகம் திரும்புவது நல்லது என மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிசாமுடீன் உசேன் அறிவுறுத்தி உள்ளார். அவ்விரு நாடுகளும் தங்கள் எல்லைகளை இன்னும் மூடவில்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
"இரு நாடுகளும் எல்லையை முடுவதற்கு முன் முடிவெடுக்க வேண்டும். இப்போது அவ்விரு நாடுகளை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதால் மலேசியர்கள் தாயகம் திரும்பவேண்டும் என்பது எனது அறிவுரை.
"எல்லைகளை மூடியபிறகு இருநாடுகளிலும் உள்ள மலேசியர்கள் நாடு திரும்ப விரும்பினால் சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்வது பெரும் செலவை ஏற்படுத்தும். அமெரிக்காவில் உள்ள அனைத்து மலேசியர்களையும் தாயகம் அழைத்து வரவேண்டுமானால், அதற்கு 50 மில்லியன் மலேசிய ரிங்கிட் செலவாகும். மாறாக, அந்தத் தொகையைக் கொண்டு நல்ல மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை வாங்கலாம்," என்று ஹிசாமுடீன் உசேன் தெரிவித்துள்ளார்.
சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மலேசியர்களை தாயகம் அழைத்துவர மூன்றாம் தரப்பின் உதவியுடனேயே சாத்தியமானது" என்பதைச் சுட்டிக் காட்டினார்.
தற்கொலை செய்த ஆடவரால் பெரும் பரபரப்பு:
இத்தகயை சூழலில் கோரோனா கிருமி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆடவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பிட்ட அந்த 62 வயது நபர் செர்டாங் பகுதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கொரோனா வைரஸ்
இந்நிலையில் குளியலறைக்குச் சென்ற அந்நபர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த தாதியர் ஒருவர் அங்கு சென்றுள்ளார். அப்போது அம்முதியவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதைக் கண்டு அதிர்ந்தார். இந்நிலையில் மருத்துவப் பரிசோதனையின் முடிவில் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.
இனி ஜாகிங் செய்தாலும் கைது:
இதற்கிடையே உடற்பயிற்சி என்ற பெயரில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் மலேசிய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மெதுவோட்டம், நடைப்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வதாக கூறிக்கொண்டு வெளியே வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டை மீறி கோலாலம்பூரில் மெதுவோட்டத்தில் ஈடுபட்ட இரு மலேசியர்கள் உள்ளிட்ட 11 பேர் கைதாகினர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி மஸ்லான் நசிம் கைதானவர்களில் ஒருவர் அமெரிக்கர், ஒரு இங்கிலாந்து பிரஜை, 4 ஜப்பானியர்கள், 2 தென்கொரியர்கள் ஆகியோருடன் இந்தியக் குடிமகன் ஒருவரும் அடங்குவர் என்றார்.
வெள்ளிக்கிழமை காலை சுமார் 7.30 மணியளவில் போலிசார் குறிப்பிட்ட அப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது குறிப்பிட்ட 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அடுத்த சில தினங்களுக்கு உடற்பயிற்சியை வீட்டிற்குள்ளேயே செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பவர்கள், அதன் தரைத்தளத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.