இந்திய ராணுவத்தினர் 20 பேர் பலி





லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன
ராணுவத்தினரிடையே திங்கள் இரவு நடந்த மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவ துருப்புகளின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய - சீன துருப்புகள் இடையே இதற்கு முன்னர் கைகலப்பு ஏற்பட்ட லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஜூன் 15/16 அன்று மீண்டும் மோதல் ஏற்பட்டது. அதில் படுகாயமடைந்த 17 இந்திய ராணுவ துருப்புகள் அங்கு நிலவும் பூஜ்ஜியத்துக்கும் குறைவான வெப்பநிலை நிலவியதால் உயிரிழந்தனர். இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ துருப்புகளின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. எல்லைப் பாதுகாப்பையும் நாட்டின் இறையாண்மையும் காப்பதில் இந்திய ராணுவம் உறுதியாக இருக்கிறது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த மோதலில் மூன்று இந்திய ராணுவ துருப்புகள் உயிரிழந்ததாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மோதலில் ஆயுதப் பயன்பாடு எதுவும் நிகழவில்லை என்றும் ராணுவ வீரர்களின் கைகலப்பே இந்த மரணங்களுக்குக் காரணம் என்று பி.டி.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

இந்த மோதலின்போது சீன தரப்பிலும் பாதிப்பு நிகழ்ந்துள்ளது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது. சீன ராணுவத்தினரை இந்திய ராணுவத்தினர் தாக்கியதாக சீனா குற்றம் சாட்டுகிறது என்றும் அந்த செய்தி முகமை தெரிவிக்கிறது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள சீன தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகளுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதை மத்திய உளவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.

இந்திய - சீன எல்லை மோதல்

இந்திய மற்றும் சீன ராணுவங்களின் மூத்த அதிகாரிகள் இடையே இந்தப் பதற்றத்தை தணிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் தளபதிகள் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்திய தரப்பு கூறுவது என்ன?

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, "லடாக் நிலவரம் குறித்து, இந்தியா - சீனா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஜூன் 6ல் உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் இரு தரப்பும் சுமூகமாக செயல்பட முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது."

"பிரச்சனை சுமூகமாக முடியும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கல்வான் பள்ளத்தாக்கில், நேற்று (ஜூன் 15) மாலை மற்றும் இரவில், இந்திய எல்லைக்குள் அத்துமீறிய சீனா ஒருதலைபட்சமாக நடந்தது. இதனால், இருதரப்பும் நேருக்கு நேர் மோதும் சூழல் உண்டானது. இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன."

"உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்ஏசி) இந்திய எல்லைக்குளேயே எங்களது நடவடிக்கைகள் இருந்தன என்பதில் இந்தியா தெளிவாக உள்ளது. சீன தரப்பிலிருந்தும் இதனை எதிர்பார்க்கிறோம். எல்லையில் அமைதியை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதே சமயம் இந்திய இறையாண்மையை பேணிப்பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று இந்திய வெளியுறத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா மேலும் தெரிவித்துள்ளார்.

(கோப்புப்படம்)படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caption(கோப்புப்படம்)

இந்திய ராணுவம் மீது சீனா குற்றச்சாட்டு

ஒருதலைபட்சமாக செயல்பட்டு பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என சீன வெளியுறவுத்துறை இந்திய ராணுவத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

திங்களன்று இந்திய ராணுவத்தினர் இரண்டு முறை அத்துமீறி சீன எல்லைக்குள் நுழைந்து, மோதலைத் தூண்டும் விதத்தில் நடந்து கொண்டனர் என்றும், இது இருதரப்பினரிடையே கைகலப்புக்கு வித்திட்டது என்றும் சீன வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

இந்தியா - சீனா இடையே நிலவி வரும் எல்லை பதற்றத்தைத் தணிக்க, கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் இரு நாடுகளைச் சேர்ந்த படைப்பிரிவு தளபதி மற்றும் கமாண்டிங் அதிகாரிகள் நேற்றுதான் இரண்டாம் கட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எல்லையில் உள்ள இரு கண்காணிப்பு பகுதியில், ராணுவக்குவிப்பை குறைப்பது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

முன்னதாக ஜூன் 6-ஆம் தேதி லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்ததைத் தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கு, பேட்ரோலிங் பாய்ண்ட் 15, உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த தங்கள் நாட்டு ராணுவத்தினரை 2 முதல் 2.5 கிலோ மீட்டர் தூரம் வரை தங்கள் நாட்டு எல்லைக்குள் சீன ராணுவம் அழைத்துக் கொண்டது என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.