இந்திய - சீன எல்லை மோதல்


லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே திங்கள் இரவு நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருவரும், ராணுவ அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.இந்த மோதலில் ஆயுதப் பயன்பாடு எதுவும் நிகழவில்லை என்றும் ராணுவ வீரர்களின் கைகலப்பே இந்த மரணங்களுக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலின்போது சீன தரப்பிலும் பாதிப்பு நிகழ்ந்துள்ளது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது. சீன ராணுவத்தினரை இந்திய ராணுவத்தினர் தாக்கியதாக சீனா குற்றம் சாட்டுகிறது என்றும் அந்த செய்தி முகமை தெரிவிக்கிறது.

இந்திய மற்றும் சீன ராணுவங்களின் மூத்த அதிகாரிகள் இடையே இந்தப் பதற்றத்தை தணிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் தளபதிகள் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு

இந்திய - சீன எல்லையான லடாக்கில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே திங்கள்கிழமை இரவு நேரிட்ட மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவத்தை சேர்ந்த மூன்று பேரில் தமிழகத்தை சேர்ந்த பழனி என்பவரும் அடக்கம் என்று தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக பிபிசி தமிழ் செய்தியாளர் சாய்ராம் ஜெயராமனிடம் பேசிய பழனியின் சகோதரரும் இந்திய ராணுவ வீரருமான இதயக்கனி, "நேற்று இருநாட்டு வீரர்களுக்கிடையே நடந்த மோதலில் எனது அண்ணன் உயிரிழந்துவிட்டதாக லடாக்கில் உள்ள ராணுவ அதிகாரிகள் என்னிடம் அலைபேசி வாயிலாக தெரிவித்தனர். தற்சமயம் ராஜஸ்தானில் பணியாற்றி வரும் நான் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள எங்களது சொந்த ஊரான கடுக்கலூருக்கு செல்ல டெல்லி விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கேன்" என்று கூறினார்.

(கோப்புப்படம்)படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caption(கோப்புப்படம்)

40 வயதான பழனி கடந்த 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். குறிப்பாக, இந்த சம்பவம் நடந்த லடாக் பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் பணியாற்றி வந்ததாக அவரது சகோதரர் இதயக்கனி கூறுகிறார்.

"நான் சுமார் 10 நாட்களுக்கு முன்னர் என்னுடைய அண்ணனிடம் பேசியபோது, தான் லடாக்கின் நகர்புறப்பகுதியிலிருந்து எல்லைப்பகுதிக்கு செல்வதாகவும், அங்கு தொலைத்தொடர்பு வசதி இருக்காது என்பதால் திரும்ப அழைப்பதற்கு நாளாகும் என்றும் கூறினார்."

"நான் ராணுவத்தில் சேர்வதற்கே என் அண்ணன் தான் காரணம். அவரது மறைவு எங்களது குடும்பத்திற்கு பேரிழப்பாகும். எனது அண்ணனின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் நிலையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை" என்று கூறும் இதயக்கனி கடந்த பத்தாண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்திய ராணுவம் மீது சீனா குற்றச்சாட்டு

ஒருதலைபட்சமாக செயல்பட்டு பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என சீன வெளியுறவுத்துறை இந்திய ராணுவத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

திங்களன்று இந்திய ராணுவத்தினர் இரண்டு முறை அத்துமீறி சீன எல்லைக்குள் நுழைந்து, மோதலைத் தூண்டும் விதத்தில் நடந்து கொண்டனர் என்றும், இது இருதரப்பினரிடையே கைகலப்புக்கு வித்திட்டது என்றும் சீன வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

இந்தியா - சீனா இடையே நிலவி வரும் எல்லை பதற்றத்தைத் தணிக்க, கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் இரு நாடுகளைச் சேர்ந்த படைப்பிரிவு தளபதி மற்றும் கமாண்டிங் அதிகாரிகள் நேற்றுதான் இரண்டாம் கட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எல்லையில் உள்ள இரு கண்காணிப்பு பகுதியில், ராணுவக்குவிப்பை குறைப்பது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தியா - சீனா: ராணுவ வீரர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

முன்னதாக ஜூன் 6-ஆம் தேதி லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்ததைத் தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கு, பேட்ரோலிங் பாய்ண்ட் 15, உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த தங்கள் நாட்டு ராணுவத்தினரை 2 முதல் 2.5 கிலோ மீட்டர் தூரம் வரை தங்கள் நாட்டு எல்லைக்குள் சீன ராணுவம் அழைத்துக் கொண்டது என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியா - சீனா எல்லை பிரச்சனை

இந்தியா - சீனா எல்லை பிரச்சனை கடந்த சுமார் ஐந்து வார காலமாக பூதாகரமாகி உள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியில் சீனா தனது ரோந்து படகுகளின் நடமாட்டத்தை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

மே மாதத் தொடக்கத்தில் இந்த ஏரியின் அருகே இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்தப் பகுதி லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் உள்ளது.

அக்சாய் சீனாவின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் சில கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக இந்தியா கூறியது. அதன்பிறகு அங்கு தனது ராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரித்தது.

லடாக்கில் எல்லைப் பகுதியில் இந்தியா அமைதி சாலைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.படத்தின் காப்புரிமைPRESS INFORMATION BUREAU
Image captionலடாக்கில் எல்லைப் பகுதியில் இந்தியா அமைதி சாலைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால் சீனாவோ, கல்வான் பள்ளத்தாக்கு அருகே சட்டவிரோதமாக பாதுகாப்பு தொடர்பான கட்டுமானங்களை இந்தியா செய்து வருவதாக குற்றம் சாட்டியது.

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா தனக்கு சொந்தமான இடம் என்று கருதும் எல்லைப்பகுதிகளில் சீனப் படைகள் கூடாரம் அமைத்து, சுரங்கங்கள் தோண்டி அதன் வழியாக கனரக உபகரணங்களை கொண்டு வந்துள்ளதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.