அறுவடை விழாவும் பூஜை வழிபாடுகளும் மரநடுகையும்


வி.சுகிர்தகுமார்
 

  அறுவடை விழாவும் பூஜை வழிபாடுகளும் மரநடுகையும் அக்கரைப்பற்று விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் இலண்டன் உதவும் கரங்கள் அமைப்பின் நிதி பங்களிப்புடன் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அறுவைச் சிகிச்சை நிபுணருமான வைத்தியர் பி.கே.ரவீந்திரனின் பிரசன்னத்துடன் சாகாமம் வால்கட்டு பிள்ளையார் ஆலயத்தை அண்டிய வயல் பிரதேசத்தில் இன்று(09) நடைபெற்றது.
நிலையத்தின் தலைவரும் இறைபணிச்செம்மலுமான த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற அறுவடை விழாவில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே.nஐகதீசன் மற்றும் மாவட்ட நீர்ப்பாசன திணக்கள பணிப்பாளர் சுதத்கமகே விவசாய அபிவிருத்தி உதவி ஆணையாளர் எல்.ஜி.சாமினி, மாவட்ட நீர்ப்பாசன திணக்கள பொறியியலாளர் ஏ.லியனகே ஆகியோர் விசேட அதிதியாகவும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு.வி.பபாகரன் அம்பாரை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர் வி.பரமசிங்கம் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் யு.எல்.சம்சுதீன், நீத்தையாறு மேல் கண்ட விவசாய அமைப்பின் செயலாளர் எம்.எல்.எம்.அசீஸ் உள்ளிட்டோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
நிகழ்விற்காக வருகை தந்த அனைவரையும் விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தின் இயக்குனர் சபை உறுப்பினர்கள் வரவேற்றனர். பின்னர் வால்கட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளிலும் அனைவரும் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து மரக்கன்றுகளை அரசாங்க அதிபர் உள்ளிட்டோர் இணைந்து நாட்டி வைத்தனர்.
பின்னர் வயல் அறுவடையினை அரசாங்க அதிபரும் மேலதிக அரசாங்க அதிபரும் இணைந்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
இதேநேரம் ஒன்று கூடல் நிகழ்விற்காக அழைத்துச் செல்லப்பட்ட அதிதிகளை இல்ல மாணவர்கள் வெற்றிலை கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து அங்கு இடம்பெற்ற நீர்ப்பாசனம் தொடர்பான விசேட கலந்துரையாடலிலும் கலந்து கொண்டனர்.
தலைமையுரையாற்றிய இல்லத்தின் ஸ்தாபகர் த.கயிலாயபிள்ளை இல்ல மாணவர்களின் வாழ்வாதாரத்திற்காக உதவும் கரங்கள் அமைப்பினரால் பெற்றுக்கொடுக்கப்பட்ட வயல் நிலத்திற்கான பாய்ச்சல் நீரை பெறுவதில் கடந்த காலத்தில் எதிர்கொண்ட சிக்கல் நிலையினையும் தற்போதுள்ள நிலையினையும் சுட்டிக்காட்டிய அவர் எதிர்காலத்தில் இதற்கான நிரந்தர தீர்வை அரச அதிகாரிகள் இணைந்து பெற்றுக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அத்தோடு இதுவரை காலமும் இதற்கான ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இறுதியில் அரச அதிபர் உள்ளிட்டவர்கள் குறித்த வயல்நிலத்திற்கான பாய்ச்சல் நிரந்தர தீர்வு தொடர்பில் ஆராய்வதாகவும் கூறியதுடன் மாணவர்களால் வழங்கப்பட்ட நினைவுப்பரிசினையும் பெற்றுக்கொண்டு மாணவர்களுக்கு ஆசி வழங்கினர்.