ஆயிரம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் விசேட வேலைத்திட்டம்



 (க.கிஷாந்தன்)

 

" மலையக மக்களுக்கு நூறு நாட்களில் ஆயிரம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் விசேட வேலைத்திட்டமானது தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது." - என்று குறித்த வேலைத்திட்டத்தின் பிரதானியும், இ.தொ.காவின் உப செயலாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

 

அத்துடன் எதிர்வரும் மூன்றாண்டுகளுக்குள் இவ்வாறு ஒரு இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் பாரத் அருள்சாமி மேலும் கூறியவை வருமாறு,

 

" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எண்ணக்கருவுக்கமைய பிரதம அமைச்சின் விசேட செயல்திட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. முதற்கட்டமாக 10 ஆயிரம் பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படும். குறிப்பாக முதல் நூறு நாட்களுக்குள்  ஆயிரம் பேருக்கு இதனை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

 

இதன்படி நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படும். அதன் பின்னர் ஏனைய பகுதிகளுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும். எப்படியும் மூன்றாண்டுகளுக்குள் ஒரு லட்சம் பேரின் காணி உரிமையை சட்டபூர்வமாக உறுதிப்படுத்துவதே எமது இலக்காக இருக்கின்றது. இதில் நுவரெலியா மாவட்டத்தில் 1200 கண்டி மாவட்டத்தில் 830 மாத்தளை மாவட்டத்தில் 340 காணி உறுதிப்பத்திரங்கள் தயார்படுத்தப்படுகின்றது.

 

நல்லாட்சி எனக் கூறிக்கொண்ட ஆட்சியாளர்களால் காணி உறுதிப்பத்திரம் என்ற போர்வையில் கடதாசி பத்திரமே வழங்கப்பட்டது. ஆனால் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டபூர்வமான ஆவணத்தையே நாம் வழங்கவுள்ளோம்.

 

மலையகத்தில் அமரர் சௌமிமூர்த்தி தொண்டமான், அமரர். ஆறுமுகன் தொண்டமான், அமரர் சந்திரசேகரன் ஆகியோராலும் தனி வீடுகள் அமைக்கப்பட்டன. எனினும், அவற்றுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் இல்லை. அந்த வீடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

 

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி தலைவராக நான் பதவியேற்றபோது, காணி உரிமை என்ற விடயத்தை தலைவர்  அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களிடம் குறிப்பிட்டிருந்தேன் அதன்படி அவர் தலைமையில் கொட்டகலை ரொசிட்டா பகுதியில் 50 குடும்பங்களுக்கு 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்ப கட்டமாக காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. இவ் விசேட வேலைத்திட்டத்தின் கமிட்டியின் பிரதானியாக அமைச்சர் என்னை நியமித்துள்ளார்" - என்றார்.