சிரார்த்த தினம்



 (க.கிஷாந்தன்)

 

“கொரோனா” தொற்று அதிகரித்து வரும் நிலையில் உலகளாவிய ரீதியில் தலைவர்கள் முக்கியமான பிரச்சினைகளை நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி “சூம்” ஊடாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்கள். அதேபோல், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைகளை “சூம்” ஊடாக மேற்கொண்டிருக்கலாம் என மலையக மக்கள் முன்னணி தலைவரும், முன்னாள் அமைச்சரும், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

 

    மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெ. சந்திரசேகரனின் 10 ஆவது ஆண்டு சிரார்த்த தின நிகழ்வு அட்டன் ஸ்ரீ கிருஷ்ணபவான் கலாசார மண்டபத்தில் இன்று (1) வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

    நிகழ்வில் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் எஸ். விஜெசந்திரன், ஆலோசகர் ஏ. லோறன்ஸ், நிதிச் செயலாளர் எம். புஷ்பா விஸ்வநாதன், மலையக தொழிலாளர் முன்னணி பொதுச் செயலாளர் கே. சுப்பிரமணியம், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர். இராஜாராம், உபதலைவர்கள் எஸ். ஜெயபாரத்தி, எஸ். கிருஷ்ணன், மகளிர் அணியினர்  உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள். “கொரோனா” காரணமாக ஒரு சிலர் மாத்திரம் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

    பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தொடர்ந்து உரையாற்றுகையில்,

 

    அரசியல் ரீதியில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்து மலையக மக்கள் முன்னணியை சந்திசெகரன் கட்டியெழுப்பிய காரணத்தால், அந்த அமைப்பின் ஊடாக அவரது பெயர் நிலைத்து நிற்கின்றது. பலரை அரசியல் ரீதியாக வளர்த்து விட்ட பெருமை சந்திரசேகரனுக்கு இருக்கின்றது. அதைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. அவரது பாசறையில் வளர்ந்தவர்கள் இன்றும் துடிப்புடன் கொள்கைப் பிடிப்போடு செயற்பட்டு வருகின்றார்கள். எனவே, இந்தக் கட்சியிலிருந்து யார் பிரிந்து சென்றாலும், சந்திரசேகரன் பெயரை நிச்சயம் நிலைக்கச் செய்வோம்.

 

    சந்திரசேகரன் உயிரோடு இருந்து அரசியல், தொழிற்சங்கம் செய்த காலத்தில் இருந்த பிரச்சினைகள் இன்று வித்தியாசமாகக்  காணப்படுகின்றன. 1992 ஆம் ஆண்டு தோட்டங்கள் கம்பனிகளுக்கு கைமாற்றப்பட்ட பிறகு தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை இருந்து வருகின்றது. கடந்த 5 வருடங்களாக 1000 ரூபா சம்பள உயர்வுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டு கூட்டு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டும் ஆயிரம் ரூபா பிரச்சினை கவனத்தில் கொள்ளப்படவில்லை.

 

    புதிதாக பதவிக்கு வந்துள்ள அரசாங்கத்தில் 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டும் என்று பிரதமர் பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட உரையில் கூறியுள்ளார். இருந்தும் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தான் சம்பள உயர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலையே உள்ளது. கூட்டு ஒப்பந்தம் இல்லாமல் சம்பளப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், இன்றுள்ள விலைவாசி அதிகரிப்புக்கு ஏற்ப தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாகப் பெற்றுக் கொடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களின் பொறுப்பாகும்.

 

    சம்பள உயர்வு தொடர்பாக இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் இணக்கம் எட்டப்படவில்லை. இந்த நிலையில் “கொவிட் – 19” காரணமாக சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த முடியாமல் ஒத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டு காலம் இழுத்தடிக்கப்படும் போது தொழிலாளர்களுக்குத் தான் இழப்பு ஏற்படும் என்பதை மறந்து விடக் கூடாது.

 

   ஏனெனில், இறுதியாக செய்து கொள்ளப்பட்ட இரண்டு கூட்டு ஒப்பந்தங்களிலும் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிலுவைப் பணம் கிடைக்கவில்லை. கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் திகதியிலிருந்து தான் சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. எனவே, கூட்டு ஒப்பந்தம் கால தாமதம் ஆகும் போது அதனால் பாதிக்கப்படப் போவது தொழிலாளர்கள் தான் என்பதை மறந்து விடக் கூடாது.

 

    உலகளாவிய ரீதியில் “கொரோனா” பரவல் காரணமாக சந்திப்புகளை மேற்கொள்ள முடியாத நிலையில் உலகத் தலைவர்கள் சூம் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றார்கள். அதேபோல், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு முக்கியமான ஒன்று என்பதைக் கவனத்திற் கொண்டு இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தொழிற்சங்கங்கள் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். அதை விடுத்து “கொரோனாவை” காரணம் காட்டி பேச்சுவார்த்தையை இனிமேலும் இழுத்தடிக்கக் கூடாது.

 

     மேலும், எமது நாட்டில் யுத்தம் நிலவிய காலத்தில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் மாகாண சபை நிர்வாக முறை ஏற்படுத்தப்பட்டது. அதன் ஊடாக அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டது. இருந்தும் இப்போது மாகாண சபை முறை தேவையில்லை என்று கூறி வருகின்றார்கள். சில அமைச்சர்களும், மத குருமார்களும், தீவிரவாதப் போக்கு உடையவர்களும் தேவையில்லை என்று குரல் எழுப்பி வருகின்றார்கள். இவர்களின் கூற்றுகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையாக ஆட்சேபித்துள்ளார்.

 

     மாகாண சபை நிர்வாக முறை சிறுபான்மை மக்களுக்கு கட்டாயம் தேவையான ஒன்றாகும். மாகாண சபைத் தேர்தலை பிற்போடக் கூடாது. ஒரு வகையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அஞ்சி இவ்வாறு மாகாண சபைத் தேர்தல் தேவையில்லை என்ற கோசத்தை முன்வைக்க தூண்டி விடுகின்றார்களோ என்றும் சந்தேகம் கொள்ளத் தோன்றுகிறது. எம்மைப் பொறுத்த வரையில் மாகாண சபைத் தேர்தல் கட்டாயம் நடைமுறையில் இருக்க வேண்டும். ஒருபோதும் இல்லாமற் செய்யக் கூடாது என்பதே எமது நிலைப்படாகும் என்றார்.