அட்டன் பகுதியிலுள்ள பிரதான பாடசாலை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடல்



 (க.கிஷாந்தன்)

 

அட்டன் பகுதியிலுள்ள பிரதான பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பாடசாலை இன்று (16.02.2021) முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 

பாடசாலை முழுவதும் தொற்றுநீக்கி தெளித்து, தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காகவே பாடசாலை இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

குறித்த ஆசிரியைக்கும் அவரின் காதலருக்கும் திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். இங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவரும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

அவர் அண்மையில் பாடசாலைக்கும் சென்றுள்ளார். தரம் 6 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இப்பாடசாலையில் சுமார் ஆயிரம் மாணவர்கள் வரை கல்வி கற்கின்றனர். அதிபர் உட்பட 40 ஆசிரியர்களும் இருக்கின்றனர்.