அலிக்கம்பை கிராமத்தின் அபிவிருத்தி திட்டத்தை அங்குரார்ப்பணம்


 


வி.சுகிர்தகுமார் 0777113659  


  அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான சௌபாக்கியா உற்பத்தி கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட அலிக்கம்பை கிராமத்தின் அபிவிருத்தி திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வி;ல் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான டபிள்யு.டி.வீரசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

ஜனாதிபதியின் சிந்தனைக்கமைவாக நாட்டில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவிலும் ஒரு கிராமத்தை தெரிவு செய்து அக்கிராமத்திற்கு ஒரு கோடி ரூபாவினை ஒதுக்கீடு செய்து அங்கு காணப்படும் வளங்களை பயன்படுத்தி குறித்த ஒரு உற்பத்தியை ஊக்குவித்து அதன் ஊடாக அக்கிராமத்தை தேர்ச்சி பெற்றதாக மாற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கமைவாக ஆலையடிவேம்பில் தெரிவு செய்யப்பட்ட அலிக்கம்பை கிராமத்தில் வாழும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபா பெறுமதியான ஆடுகளை வழங்கி அவர்களது பங்களிப்புடனும் இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்;ட அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான டபிள்யு.டி.வீரசிங்க உள்ளிட்டவர்கள் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களால் வரவேற்க்;கப்பட்டனர்.

பின்னர் சௌபாக்கியா உற்பத்தி கிராம அபிவிருத்தி பெயர்ப்பலகையினையும் பிரதம அதிதி திரை நீக்கம் செய்து வைத்தார். தொடர்ந்து மாணவர்களின் வான்ட் வாத்திய குழுவினரின் இசையோடு வரவேற்கப்பட்ட அதிதிகள் அலிக்கம்பை சென் சவேரியர் தேவாலயத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றிலும் பங்கேற்றனர்.

இறை ஆசியோடு ஆரம்பமான நிகழ்வில் பிரதேச செயலாளர் அதிதிகளை வரவேற்று உரையாற்றியதுடன் திட்டம் தொடர்பிலும் விளக்கினார். இதன் பின்னராக தேவாலயத்தின் அருட்தந்தை சூசைநாயகம் அடிகளார் பாராளுமன்ற உறுப்பினரின் வருகை தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்ததுடன் கிராமத்தின் தேவைப்பாடுகள் தொடர்பிலும் எடுத்துரைத்தார்.

இதன் பின்னராக உரையாற்றிய அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான டபிள்யு.டி.வீரசிங்க கிராமத்தின் பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் தன்னால் முடிந்தவற்றை நிறைவேற்றி தருவதாகவும் முதற்கட்டமாக கிராமத்தை இணைக்கும் வீதியினை இவ்வருடத்தினுள் புனரமைத்து தருவதாகவும் கல்வி அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் அத்தோடு கிராம அபிவிருத்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒரு கோடி ரூபாவிற்கு மேலதிகமாக தனது சொந்த நிதியில் இருந்தும் 10 இலட்சத்தை ஒதுக்கீடு செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.

இறுதியாக தமது கிராமத்திற்கு வருகை தந்து அபிவிருத்தியில் கைகோர்த்த அனைவருக்கும் பொதுமக்கள் சார்பில் ஒருவர் நன்றி தெரிவித்தார்.

நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் க.பிரகஸ்பதி உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை உப தவிசாளர் விக்டர் ஜெகன் பிரதேச சபை உறுப்பினரும் பாரளுமன்ற உறுப்பினரின் ஆலையடிவேம்பு இணைப்பாளருமான சிந்துஜா உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.