"தனிமைப்படுத்தல் நடைமுறை விரக்தியை தருகிறது" ரவி சாஸ்திரி


 


கொரோனா தனிமைப்படுத்துதல் நடைமுறை கடுமையான விரக்தியை தருகிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்காக கடந்த ஒரு மாதமாக இந்திய அணி இங்கிலாந்தில் முகாமிட்டு இருக்கிறது. இக்காலக் கட்டத்தில் ரிஷப் பன்ட் உள்ளிட்ட இந்திய வீரர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் வலைப்பயிற்சி பந்துவீச்சாளரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோர் 10 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்தனர்.

இந்நிலையில் தனிமைப்படுத்தலை முடித்துக்கொண்ட பரத் அருணுடன் செல்பி எடுத்துக்கொண்ட ரவி சாஸ்திரி, அதனை ட்விட்டரில் பகிர்ந்தார். அந்தப் பதிவில் "என்னுடைய வலது கை மீண்டும் வந்துவிட்டார். முன்பை விட பிட்டாகவும், வலிமையாகவும் இருக்கிறார். கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்த பின்பு 10 நாள்கள் தனிமை என்பது கடுமையான விரக்தியை ஏற்படுத்துகிறது. இந்த விதிகள் எரிச்சலை தருகிறது. இரு முறை தடுப்பூசி போட்டுள்ளோம் அதனை நம்ப வேண்டும்" என தெரிவித்துள்ளார்.