ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி இடம்பெற வேண்டும்


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



வித்தியாவிற்கு கிடைத்த நீதி போன்று ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி இடம்பெற வேண்டும் என சமூக சேவகர் தாமோதரம் பிரதீவன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் நற்பிட்டிமுனை பகுதியில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவிற்கு இன்று(22) மாலை சென்று ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் விசாரணை நீதியாக இடம்பெற கோரி மகஜர் ஒன்றினை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் குறிப்பிட்டதாவது

ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் என  வலியுறுத்துகின்றோம்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  வீட்டிலே பணிபுரிந்து  தீக்காயங்களுக்கு ஏற்பட்டு  கடந்த 15ம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணமும் அதைத் தொடர்ந்து வெளிவருகின்ற தகவல்களும் முழு நாட்டு மக்களுக்கும் மிகவும் வேதனையை அளிக்கின்றதாக இருக்கின்றதை நாம் அறிவோம்.

ஈடு செய்ய முடியாத இவ்விழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை   தெரிவிப்பதுடன்   இறந்த சிறுமிக்கு உரிய நீதி கிடைக்கப்பெற வேண்டும்.இதனை  மிக வன்மையாக கண்டிப்பதோடு  சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் என்றும் குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் முறையான தண்டனை வழங்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதனை சம்பந்தப்பட்ட தரப்பினரை கேட்டுக்கொள்கின்றேன்.

வறுமை மற்றும் குடும்ப சூழ்நிலையின் காரணமாக கல்வியை தொடரமுடியாது சிறுவர்கள் பணிக்கமர்த்தப்படுவதும்இ பல்வேறு வகையான துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களுக்கு சிறார்கள் முகம்கொடுப்பதும் அண்மைய காலகட்டத்தில் மிகவும் அதிகரித்திருக்கின்றது. எனவே மலையகத்தில் கல்வி மறுமலர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும்.தொடர்ந்தும் எதிர்காலத்தில் இவ்விதமான அசம்பாவிதங்கள் இடம்பெறாது இருக்க அரசு மற்றும் அதிகாரிகளோடு பொதுமக்களும் அவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும்  செயற்பட வேண்டும் என கோருகின்றேன் என குறிப்பிட்டார்.