போக்குவரத்து சபை உத்தியோகத்தர்கள் போராட்டம்



 


பாறுக் ஷிஹான்


இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை பிராந்திய   உத்தியோகத்தர்கள் எரிபொருள் நெருக்கடி காரணமாக போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். 

இன்று (6) திடிரென கல்முனை பிராந்திய  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ முன்றலில் ஒன்று கூடி தமக்கு எரிபொருளை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த  கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்  வழிகாட்டலில் துரிதமாக செயற்பட்ட கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான  அலியார் றபீக் , கல்முனை  பொலிஸ் நிலைய சமூக  பொலிஸ் பிரிவு  பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ. எல் ஏ. வாஹிட் ,  தலைமையிலான  பொலிஸ் குழுவினர்   உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சுமார் 210 லீற்றர் பெற்றோல் கல்முனை ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் இருந்து பெற்றுக்கொடுக்கப்பட்டது.

இதன் போது குறித்த எரிபொருள் பெற்றுக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை நிறுத்தி வழமை போன்று தமது பணிகளை கல்முனை பிராந்திய அலுவலக உத்தியோகத்தர்கள் முன்னெடுத்தனர்.

மேலும் இப்போராட்டத்தினால் கல்முனை பிராந்திய போக்குவரத்து டிப்போவில் எரிபொருளை பெற வந்திருந்த தனியார் பேரூந்துகள்  வீதியை மறித்து காணப்பட்டமையினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.