அம்பாறை மாவட்டத்திலிருந்து "குரு பிரதீபா" விருதுக்கு தெரிவுசெய்யப்பட்ட ஒரே ஒரு அதிபர்



 


(V.T. சகா)


 கிழக்கு மாகாணத்தில் தலைசிறந்த அதிபர்களுள் ஒருவராக அம்பாறை மாவட்டத்திலிருந்து "குரு பிரதீபா" விருதுக்கு தெரிவுசெய்யப்பட்ட ஒரே ஒரு அதிபர் எமது அருட் சகோதரி சிறியபுஷ்பம்.  முழுத் தேசத்தையும் சம்மாந்துறை வலயத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்துள்ள அவரை வலயம் சார்பாக வாழ்த்திப் பாராட்டுவதில் பெருமையடைகிறேன்.

 இவ்வாறு சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட சொறிக்கல்முனை ஹொலிகுறோஸ் மகா வித்தியாலய அதிபர் அருட் சகோதரி  எம் .சிறியபுஷ்பம்  "குரு பிரதீபா " விருது பெற்றமையை  பாராட்டிக் கௌரவிக்கின்ற விழாவில் உரையாற்றிய சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம் .எஸ். எஸ். அமீர் புகழாரம் சூட்டினார்.

இந்த விழா நேற்று (19)  ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டது.

 முன்னதாக பாராட்டப்பட்ட அதிபரும் ,அதிதிகளும் வீதி ஊர்வலமாக பான்ட் வாத்தியம், மயில் நடனம் சகிதம் ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டார்கள்.

 இந்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான திருமதி நிதர்சினி மகேந்திரகுமார், ஏஎல்.அப்துல்மஜீட், உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, ஆசிரிய ஆலோசகர்களான கே. ரத்னேஸ்வரன், எஸ். பிரகதீஸ்வரன் ,அதிபர் சங்க பிரதிநிதி கே. செல்வசிகாமணி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அங்கு பணிப்பாளர் அமீர் மேலும் பேசுகையில்..

 சொறிக்கல்முனை ஹொலிகுறோஸ் மகா வித்தியாலயம் கல்வியோடு பண்பாட்டு விழுமியங்களையும் ஊட்டி வளர்க்கிறது. கொரோனா காலகட்டத்தில் இப்பாடசாலை ச விழிப்புடன் இயங்கியதை அறிவோம். பொருத்தமான ஒருவருக்கு பொருத்தமான விருது கிடைக்கப்பெற்றதில் வலயம் பெருமை அடைகின்றது. 

சாதனை அதிபர் சகோதரி சிறிய புஷ்பம் அவர்களுக்கு வலயம் சார்பாகவும் ,பாடசாலை சார்பாகவும்,   சமூகம் சார்பாகவும், கோட்டம் சார்பாகவும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி ஆளுயர மாலை சூட்டி பாராட்டி கௌரவித்தார்கள்..
ஆசிரியர்கள் இணைந்து விருந்துபசாரம் செய்தார்கள்.