மூன்று சிறுவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் கார் விபத்து




 


பாறுக் ஷிஹான்


3 பேர் சென்ற மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதில் நால்வர் காயமடைந்து கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை முஹைத்தீன் ஜும்மா பள்ளிவாசல் முன்பாக இவ்விபத்து ஞாயிற்றுக்கிழமை(23) இரவு இடம்பெற்றது.

இதன் போது மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி எதிரே வந்த கார் ஒன்றின் மீது மோதுண்டதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் தலைக்கவசமின்றி பயணித்த மூன்று சிறுவர்கள் மற்றும் கார் சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிகக்ப்பட்டனர்.

மேலும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்கள் சுமார் 15 வயது 16 வயது  மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன் சாரதி அனுமதி பத்திரமின்றி மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றமை பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதே வேளை கல்முனை பெரிய நீலாவணை காரைதீவு சம்மாந்துறை நிந்தவூர் பகுதிகளில் பகல் மற்றும் இரவு வேளையில் தலைக்கவசமின்றி மூவர் கொண்ட மோட்டார் சைக்கிள் படையணி போன்று இளைஞர்கள் சிறுவர்கள்  அபாயகரமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.