களுதாவளை கெனடி விளையாட்டு கழகம் சம்பியன்




 


( வி.ரி. சகாதேவராஜா)


காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம் தனது 36-வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 32 கழகங்களை இணைத்து மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியொன்றை விபுலானந்த மைதானத்தில் நடாத்தியது.

“சுதா-விக்கி”ஞாபகார்த்த கிண்ணத்திற்கான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்று  போட்டியின் இறுதிப் போட்டி கடந்த சனிக்கிழமை  இடம்பெற்றது.
 இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் 
வைத்திய கலாநிதி டாக்டர் இரா . முரளீஸ்வரன்  கலந்து சிறப்பித்தார். 

இந்த நிகழ்வு அம்பாறை மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநித்துவ படுத்துகின்ற 32 தமிழ் முன்னணி கழகங்களை இணைத்து தமிழ் கழகங்களின் 
சினேகபூர்வத்தையும் கிரிக்கெட் துறையினையும் முன்னெடுப்பதற்காகவும்  விவேகானந்தா விளையாட்டு கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிக்கு களுதாவளை கெனடி விளையாட்டு கழகமும் பொத்துவில் ப்ரீ லயன்ஸ் விளையாட்டு கழகமும் மோதிக்கொண்டதுடன் இறுதியில் களுதாவளை கெனடி விளையாட்டு கழகம் சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
கல்வி சாதனையாளர்களுக்கான பாராட்டு விழாவும் வைத்திய துறையில் அளப்பரியசேவை  புரிந்த பணிப்பாளர்  வைத்திய கலாநிதி 
டாக்டர் இரா.. முரளீஸ்வரன் மற்றும்,நிகழ்வின் கௌரவ அதிதி பொதுவைத்திய சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் நடேசன் அகிலன்  ஆகியோர் இந்நிகழ்வில் பொன்னாடை போர்த்தி  கௌரவிக்கப்பட்டனர்.


மேலும் இந்த சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ரூபாய் 30,000 பணப்பரிசும் பெறுமதி மிக்க வெற்றி கிண்ணமும் இரண்டாம்  இடத்தை பெற்ற அணிக்கு  ரூபாய் 20000 பணப்பரிசும் பெறுமதி மிக்க வெற்றி கிண்ணமும் மற்றும் மூன்றாம் இடத்தினை பெற்ற தாண்டியடி சுப்பகிற் அணிக்கு பெறுமதி மிக்க வெற்றி கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது. 

 இறுதியில் கழகத்தின் செயலாளர் கே. உமா ரமணன் நன்றி உரையாற்றினார்.