தொழுநோய் பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் விரிவுபடுத்த நடவடிக்கை !



நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் அவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாக கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ.சீ எம் பசால் அவர்களினால் இன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் தொழுநோயை கண்டறிவதற்கும் சிகிச்சைகளை விரைவுப்படுத்துவதற்குமான கலந்துரையாடல் தேசிய தொழுநோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் பிரசாத் ரணவீரர் அவர்களின் பங்குபற்றுதலுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களுடன் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எம்.பி.ஏ வாஜித், பிராந்திய தொற்றுநோய் தடுப்பியலாளர் வைத்தியர் எம்.ஏ.சி.எம். பசால் உள்ளிட்ட பிரிவு தலைவர்களும், கிராம நிலதாரிகளும், சுகாதாரத்துறை ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
 
குறித்த கலந்துரையாடலின் போது கல்முனை பிராந்தியத்தில் தொழுநோயை கண்டறிவதற்கான பொறிமுறைகளை இலகுப்படுத்துவதற்கும் துரிதப்படுத்துவதற்கும் அதற்கான சிகிச்சைகளை மக்கள் அச்சமின்றி பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறை  பற்றி மக்களை தெளிவுபடுத்துவதற்குமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பணிப்பாளர் தெரிவித்தார். குறித்த நிகழ்வில் பங்கு பற்றிய தேசிய தொழுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் தனது உரையின் போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொழுநோய் கண்டறிதலுக்கான செயற்பாடுகள் மற்றும் அதனை கட்டுப்படுத்தி சிறப்பாக முகாமை செய்வது தொடர்பிலும்  தமது திருப்தியை வெளியிட்டிருந்தார்.