பட்டமளிப்பு





 (நூருல் ஹுதா உமர்) 


சாய்ந்தமருது தாறுள் இல்மு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் டிசம்பர் 27 நடைபெற்றது.

ஆங்கில எலகியுஸன், சிங்கள எலகியுஸன், சதுரங்கம், அபாகஸ் போன்ற பாடநெறிகளை கடந்த 10 வருடங்களாக வழங்கும் சாய்ந்தமருது தாறுள் இல்மு கல்லூரியில் இருந்து வருடாந்த இறுதிப் பரீட்சைகளில் சித்தியெய்திய மாணவர்களுக்கான விண்டோ அவார்ட் மற்றும் அபாகஸ் பட்டமளிப்பு விழாவில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சான்றிதழ்கள், பதக்கங்கள், வெற்றிக் கேடயங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி வைத்தார். 

ICAM அபாகஸ் நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும், LCBC நிறுவன கிளைப் பொறுப்பாளரும், கல்முனை கல்வி வலய ஆசிரிய ஆலோசகருமான ஆதம்பாவா றாஸிக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்முனை கல்வி வலய கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம்.எச்.றியாஸா, LCBC நிறுவன பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.ஜவாஹிர் மற்றும் ICAM அபாகஸ் நிறுவன பணிப்பாளர் திரு. ரீ.எம்.ஷாபி ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஆங்கில எலகியுஸன் விண்டோ பாடநெறியின் பாடசாலை மாணவர்களுக்கான ஆங்கிலமொழி திறமைகான் எழுத்து, வாய்மொழி மூலப் பரீட்சைகளில் சித்தியெய்திய தரம் 1 முதல் 7 வரையான 190 மாணவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள், வெற்றிக் கேடயங்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்தியாவில் சென்னை நகரில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் வெற்றிபெற்று முதலாம் இடங்களைப் பெற்ற மூன்று மாணவர்கள் உட்பட இப்போட்டியில் பங்குபற்றியவர் என நான்கு மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற அபாகஸ் 7வது தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றி முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களையும் மற்றும் ஆறுதல் பரிசையும் வென்ற 38 மாணவர்களுக்கான கௌரவங்களும் அளிக்கப்பட்டது.

அபாகஸ் பாடநெறியின் 5 மட்டங்களையும் பூர்த்திசெய்த 17 மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும் இதன்போது நடைபெற்றது. 

மேலும், அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற அபாகஸ் புத்தாக்க நிகழ்நிலைப் போட்டியில் பங்குபற்றிய 10 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், தங்கப் பதக்கம் வென்ற மாணவிக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டது.

ஆங்கில எலகியுஸன் மற்றும் அபாகஸ் பரீட்சை உட்பட அபாகஸ் போட்டிகள் என தமது திறமைகளை வெளிப்படுத்திய 225 மாணவர்கள், இந்தப் பட்டமளிப்பு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.