'21 வயதுக்குள் பட்டம் பெறும் வகையில் கல்வித்திட்டம் மாற்றப்பட வேண்டும்"





 நூருல் ஹுதா உமர் 


இன்று உலகம் மாறிவிட்டது அதற்கேற்றால் போல் நாமும் மாறவேண்டும். ஒருகாலம் இருந்தது தலைவர்கள் கட்டளை பிறப்பிப்பவர்களாக இருந்தனர். இன்று தலைவர்கள் நல்லதொரு பயிற்றுவிப்பாளராக உருவாக்கப்பட்டு இருக்கின்றார்கள், அவர்கள் எந்த இடத்தில் யாரை நியமிக்கவேண்டும் என தீர்மானிக்கின்றனர். முன்னர் தனி ஒருவர் தீர்மானங்களை மேற்கொண்டார். இன்று ஒரு குழு இருந்து தீர்மானங்களை மேற்கொள்ளும் முறைக்கு உலகம் மாறிவிட்டது என கிழக்கின் கேடயம் பிரதானியும், அக்கறைப்பற்று மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான இடைக்கால செயலகத்திற்கும் அம்பாறை மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதானிகள், கல்விமான்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று (06) மாலை நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அதனடிப்படையில் மக்களிடமிருந்தும் கருத்துக்களை எடுத்து சட்டங்களை இயற்றுவதற்கு அரசு இப்போதாவது எத்தனித்துள்ளமையினை இட்டு சந்தோசமடைகின்றோம். நமது நாட்டில் காணப்படும் கல்விமுறையில் உடனடி மாற்றங்களை செய்ய வேண்டும். ஒருமாணவன் தனது முதல் பட்டப்படிப்பை 21 வயதுக்குள் நிறைவு செய்து அவன் ஒரு தொழிலை உருவாக்கி 10 பேருக்கு தொழில் வழங்கும் அளவிற்கு கல்வித்திட்டங்கள் மாற்றம் பெறவேண்டும்.

ஆண்டு ஒண்டு தொடக்கம் பல்கலைக்கழகம் வரை கல்வி கற்றுவிட்டு மீண்டும் அரசாங்கத்தையே ஒரு தொழிளுக்காக காத்திருக்கும் கல்விமுறையை எதற்காக வைத்திருக்கின்றோம். இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் பட்டதாரிகளாக வரவேண்டும். சிறு தேநீர்கடை வைத்திருப்பவர் கூட அக்கடையில் விளம்பரம், களஞ்சியம், கணக்கு, சம்பளம், என எத்தனையோ விடயங்கள் இருக்கின்றது. அவைகளை முறையாக செய்வதற்கு அவர்கள் கல்வி அறிவு படைத்தவர்களாக இருக்க வேண்டும்.

ஆனால் நாம் குறிப்பிட்ட மாணவர்களையே கலாசாலைகளுக்கு தெரிவு செய்கின்றோம். இந்த முறை பிழையானதாகும். அரசாங்கம் தமது வசதிக்கேற்ப மாணவர்களை இணைத்துக்கொள்ளட்டும். ஆனால் தகுதி வாய்ந்த ஏனைய மாணவர்களும் பட்டப்படிப்பினை மேற்கொள்ள தரமான தனியார் பல்கலைக்கழகங்களை அரசு உருவாக்கவேண்டும், கலாசாலைகள் research, and inquiry, creative, moral leadership, and entrepreneur leadership போன்ற கல்வி முறைகளுக்கு மாற்றம் பெற்று ஒருமைப்பாட்டோடு புதிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்த வேண்டும் அதனூடாக நாடு முன்னேற வேண்டும்.
 
இதற்கு ஆரம்ப கல்வி முறைகளில் மாற்றம் என்பது இன்றியமையாதது ஆரம்ப கல்விமுறையில் genius hour, experiential hour, Bit-size learning, joyful learning and gamification இவ்வாறான மாற்றங்களை கொண்டு வரப்பட வேண்டும்  இதற்கு ஆரம்ப பாடசாலைகளுக்கு double degree பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் நாம் இன்னமும் home guard teacher களை வைத்துக் கொண்டு உற்பத்தித்திறன் கொண்ட மாணவர்களை உருவாக்கமுடியாது 
என தெரிவித்தார்