சமுதாய சீர்திருத்தக் குழு, சிறுவர் கண்காணிப்பு மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான செயற்குழு கூட்டம்





நூருல் ஹுதா உமர் 

இறக்காமம் பிரதேச சிறுவர்களின் உரிமை, பாதுகாப்பு, அபிவிருத்தி, சிறுவர் நலன் மற்றும் மேம்பாடு மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள், பெண்கள் எதிர்நோக்கும் துஷ்பிரயோகங்கள், அவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் என்பவை தொடர்பாக காலாண்டுக்கு ஒரு முறை இக்கூட்டத்தில் ஆராயப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பிரதேச மட்ட சமுதாய சீர்திருத்தக் குழு, சிறுவர் கண்காணிப்பு மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான செயற்குழு கூட்டம் இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் தலைமையில் இன்று இறக்காமம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவை தொடர்பில் சமூக மட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அம்பாறை நீதிமன்ற நீதிபதி அவர்கள் விசேட உத்தரவையடுத்து மாவட்ட சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் என்.எம். இக்ராம் மற்றும் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி வி.யசோதா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதேச சிறுவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில், பாடசாலை இடைவிலகல், கல்வி ரீதியான பிரச்சினைகள், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு, பிரத்தியேக கல்வி நடவடிக்கைகள், சிறுவர்களை மையப்படுத்திய போதைப் பாவனை, இளவயது திருமணம், சிறுவர்களின் சுகாதார மேம்பாடு, விசேட தேவையுடைய சிறுவர்களின் நலனோம்பல் தொடர்பான விடயங்கள் மற்றும் சமுதாய சீர்திருத்தக் குழு, கிராம மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் (VCDC) 2024 ஆம் ஆண்டு வருடத்திற்கான செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. 

மேலும், பால்நிலை வன்முறை மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பிரதேச மட்டத்தில் தங்கள் அமைப்பு சார்ந்த வேலைத்திட்டங்கள், குடும்ப வன்முறை, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்கள் அவற்றை குறைப்பதற்கும் தடுப்பதற்கான நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

மேற்படி கூட்டத்திற்கு குவாசி நீதவான் சட்டத்தரணி எஸ்.எல். பாறூக், பிரதேச சபை செயலாளர் எல்.எம். இர்பான், சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எம்.என்.எப். றஸ்கா ஆஸ்மி, பொலிஸ் நிலைய நிர்வாக பொறுப்பதிகாரி எம்.வை. ஜௌபர், (GN) எச்.பி. யசரட்ன பண்டார, சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.எல். நௌபீர் சமுர்த்தி வங்கி முகாமையாளர் டி. கே. ரஹ்மதுல்லாஹ் மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ. சபீர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
 
மேலும் சிறுவர் , சமய நிறுவனங்களின் தலைவர்கள், ஜம்இய்யதுல் உலமா சபை, பொதுச் சுகாதார பரிசோதகர், இஸ்லாமிக் ரிலீப், மனித எழுச்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள், மகளிர் சங்க பிரதிநிதிகள், கிராம மட்டத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இளைஞர் சேவைகள் அதிகாரி ஏ.ஆர். றியாஸ், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.றகீப், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். முஹம்மட் இம்டாட், பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.