"கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையில் ‘பராமரிப்புப் பிரிவு’ திறப்பு



 


கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையில் ‘பராமரிப்புப் பிரிவு’ திறப்பு 


நூருல் ஹுதா உமர் 


கல்முனை பிராந்தியத்திற்குட்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, நோயாளர் சேவைகளை தடையின்றி முன்னெடுக்கும் நோக்கில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புதிதாக பராமரிப்புப் பிரிவொன்று (Maintenance Unit) திறந்து வைக்கப்பட்டுள்ளது.


பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள், நேற்று (09) குறித்த பிரிவினை நாடாவெட்டி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பிராந்திய பிரிவுத் தலைவர்கள், பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட இப்பிரிவு, பிராந்திய திட்டமிடல் பிரிவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கவுள்ளது. இதற்கென Plumber, Electrician, Carpenter போன்ற துறையில் அனுபவமுள்ள ஊழியர்கள் பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


சுகாதார நிறுவனங்களில் ஏற்படும் பின்வரும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண்பதே இப்பிரிவின் பிரதான நோக்கமாகும்.


வைத்தியசாலைகளில் திடீரென ஏற்படும் மின்சாரத் தடைகள் மற்றும் நீரிணைப்புப் பிரச்சினைகளை உடனுக்குடன் சீர்செய்தல்.


சேதமடைந்த கட்டடப் பகுதிகள் மற்றும் ஏனைய தளபாடப் பழுதுகளை இனங்கண்டு அவற்றை விரைவாகத் திருத்தியமைத்தல்.


இப்பராமரிப்புப் பிரிவு இயங்குவதன் ஊடாக வைத்தியசாலைகளில் ஏற்படும் சிறிய தொழில்நுட்பக் கோளாறுகளால் நோயாளர் சேவைகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவும், நீண்டகாலம் காத்திருக்காமல் உடனுக்குடன் தீர்வுகளை வழங்கவும் முடியும்.