காதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஜயம்..!



 (எம்.என்.எம்.அப்ராஸ் ) 


கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் ஐ. எல். எம்.றிபாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளை நேரில் பார்வையிடும் நோக்கில், இலங்கை சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன அவர்கள் இன்று (28) வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார். 

இவ்விஜயத்தின் போது, நோயாளிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டண விடுதி (Pay Ward), தாதியர் நிர்வாக அலுவலகம் (Nursing Administration Office) மற்றும் Overseer அலுவலகம் ஆகியவற்றை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்அதனைத் தொடர்ந்து, வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகளையும் நேரில் பார்வையிட்ட அவர், நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சுகாதார சேவைகள், மருத்துவ வசதிகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடினார். 

பின்னர் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் வைத்தியசாலையின் தற்போதைய தேவைகள், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள், புதிய உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்களின் மேம்பாடு மற்றும் பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவைகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பான பல்வேறு விடயங்களை முன்வைத்தனர். அவற்றை கேட்டறிந்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கியதுடன்,வைத்தியசாலையின் எதிர்கால முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தார். 

இந்நிகழ்வில் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ. எல்.பாறூக், திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.தாசிம், தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி டாக்டர் கே. எல். எம்.ரயிஸ், விசேட வைத்திய நிபுணர்கள், கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர்,பிரதம தாதியர் (Matron), வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலையின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 நிகழ்வின் நிறைவில்,சுகாதாரத் துறைக்கு ஆற்றிவரும் அர்ப்பணிப்புமிக்க சேவையையும் சிறந்த தலைமைத்துவத்தையும் பாராட்டும் வகையில், டாக்டர் அசேல குணவர்தன அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. இவ்விஜயம், அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதுடன், தரமான, மக்கள் மையப்படுத்தப்பட்ட சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

M.N.M.Afras