தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்



 




பாறுக் ஷிஹான்,NOORUL HUTHA UMAR


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (ஜூலை 25) ஒலுவிலிலுள்ள பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான கேட்போர் கூடத்தில் கோலாகலமாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இன்றிலிருந்து தொடர்ந்து வரும் ஜூலை 26 மற்றும் 27 ஆகிய மூன்று நாட்களுக்கு ஒன்பது தனித்தனி அமர்வுகளாக (Sessions) நடைபெறவுள்ள இவ்விழாவில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த உள்வாரி மாணவர்கள் மற்றும் வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்கள் உட்பட மொத்தமாக 3,398 பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க 18ஆவது பட்டமளிப்பு விழா, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் தலைமையில், வேந்தர் கலாநிதி பாயிஸ் முஸ்தபா (PC) முன்னிலையில் நடைபெற்று வருகின்றது. விழாவின் நிர்வாக ஒருங்கிணைப்புப் பணிகளை பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் மேற்கொண்டு வருகிறார்.

இன்றைய ஆரம்ப அமர்வில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட பட்டதாரிகளுக்கான பட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நாளின் விசேட அம்சமாக மத்திய மாகாண ஆளுநரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான பேராசிரியர் சரத் அபேயகோன் பட்டமளிப்பு விசேட உரையை ஆற்றவுள்ளார்.

அமர்வுகளின் விபரம்:
முதல் நாள் (இன்று - ஜூலை 25):

1ஆம் அமர்வு: பொறியியல் பீடம் (2018/2019 மற்றும் 2019/2020 கல்வியாண்டுகள்) மற்றும் தொழில்நுட்பப் பீடம்.

2ஆம், 3ஆம் அமர்வுகள்: இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீடத்தின் இரண்டு கல்வியாண்டுகளைச் சேர்ந்த பட்டதாரிகள்.

இரண்டாம் நாள் (நாளை - ஜூலை 26):

4ஆம் அமர்வு: பிரயோக விஞ்ஞான பீடத்தின் இரண்டு கல்வியாண்டுகளைச் சேர்ந்த பட்டதாரிகள்.

5ஆம், 6ஆம் அமர்வுகள்: கலை மற்றும் கலாசார பீட மாணவர்கள்.

இறுதி நாள் (நாளை மறுதினம் - ஜூலை 27):

7ஆம், 8ஆம் அமர்வுகள்: முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடத்தின் பட்டதாரிகள்.

9ஆம் அமர்வு: கலை மற்றும் கலாசாரப் பீடம், முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடம் ஆகியவற்றின் வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்கள்.

இம்முறை பொறியியல், தொழில்நுட்பவியல், இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழி, பிரயோக விஞ்ஞானம், கலை மற்றும் கலாசாரம், முகாமைத்துவம் மற்றும் வர்த்தகம் ஆகிய பீடங்களைச் சேர்ந்த பெருமளவிலான மாணவர்கள் ஒரே தடவையில் பட்டம் பெறுவது, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி வளர்ச்சியையும் உயர்கல்வித் துறைக்கான அதன் பெரும் பங்களிப்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

முன்னதாகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு அங்கி (Convocation Cloak), மாலை, அனுமதிச்சீட்டு மற்றும் தொடர்புடைய பொருட்கள் கடந்த ஜூலை 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பீடங்களில் நேரில் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.