டில்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்துப் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், மத்திய அரசின் இச்செயல்பாடு கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டில்லியில் நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தவெக தனது முழு ஆதரவைத் தெரிவிப்பதாக விஜய் அறிவித்துள்ளார்.
நீட் தேர்வு முறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே தவெக-வின் சமரசமற்ற நிலைப்பாடு ஆகும். மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதிக்கும் இந்த முறையை வைத்துப் பொய் வாக்குறுதிகளை அளித்து வாக்கு அரசியல் செய்ய மாட்டோம் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
நீட் போன்ற தேர்வுகள் ஒழிக்கப்பட வேண்டுமெனில், கல்வியை உடனடியாக மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்; இதுவே ஒரே நிரந்தரத் தீர்வாகும்.
இதில் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை 'சிறப்புப் பொதுப் பட்டியல்' (Special Concurrent list) ஒன்றை உருவாக்கி, கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்டவற்றில் மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே தங்களது பார்வை என அவர் வலியுறுத்தியுள்ளார்.


Post a Comment
Post a Comment