பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி 94 வயதில் இன்று காலமானார்




பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி 94 வயதில் இன்று காலமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து, பல தலைமுறை நடிகர்களுடனும் நடித்த பழம்பெரும் நடிகையான சௌகார் ஜானகி, தனது 94 வயதில் இன்று சென்னையில் காலமானார்.

வயது மூப்பு காரணமாக சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கதாநாயகியாகத் தொடங்கி, குணச்சித்திரம், நகைச்சுவை, எதிர்மறை பாத்திரம், தாய், பாட்டி என காலத்தோடு தன்னையும் தனது நடிப்பையும் மாற்றியபடி அவர் தொடர்ந்து வந்த ஒரு நீண்ட கலைப் பயணம் இதன் மூலம் நிறைவுக்கு வந்துள்ளது.


வானொலியில் தொடங்கிய கலை ஆர்வம்
கடந்த 1931 டிசம்பர் 12ஆம் தேதி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்த சௌகார் ஜானகியின் இயற்பெயர் சங்கரமஞ்சி ஜானகி.

காகித ஆலை நடத்தி வந்த அவரது தந்தையின் தொழில் காரணமாக குடும்பம் பல்வேறு இடங்களில் வசிக்க வேண்டியிருந்தது. சென்னையில் இருந்த காலத்தில் சாரதா வித்யாலயாவில் படித்த ஜானகி, சிறு வயதிலேயே குழந்தைகளுக்கான வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

பின்னர் சென்னை அகில இந்திய வானொலியில் நாடகக் கலைஞராகவும் அறிவிப்பாளராகவும் பணியாற்றினார்.

அவரது வானொலி நாடகத்தைக் கேட்ட தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி, திரைப்படத்தில் நடிக்குமாறு அவரை அணுகினார்.

ஆனால் அவரது குடும்பத்தினர் அதற்குச் சம்மதிக்கவில்லை. மாறாக உறவினர் ஒருவருடன் அவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்திற்குப் பிறகு கணவருடன் விஜயவாடாவில் வசித்தார்.

 அதிகம் படிக்கப்பட்டது and continue reading

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி 94 வயதில் இன்று காலமானார்
இலங்கை: ஒருவரின் சிறுநீரகப் பையில் இருந்து 3.1 கிலோ கல் அகற்றம் - மருத்துவருடன் 7 கேள்வி - பதில்கள்
நோயாளியின் சிறுநீர்ப்பையில் இருந்த 3.1 கிலோ கல் அகற்றம் - மருத்துவர் பகிர்ந்த 7 விஷயங்கள்
End of அதிகம் படிக்கப்பட்டது
ஆனால் திருமண வாழ்க்கை அவரை சினிமாவில் இருந்து முழுமையாகத் தள்ளி வைக்கவில்லை. குடும்பத்தின் பொருளாதார நிலை மோசமடைந்தபோது, வாழ்க்கையை நடத்துவதற்கான ஒரு வழியாக மீண்டும் சினிமாவை அவர் அணுக வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று சௌகார் ஜானகி தனது பேட்டிகளில் நினைவுகூர்ந்துள்ளார்.

சௌகார் ஜானகி: வறுமையில் கைக்குழந்தையுடன் வாய்ப்பு தேடியவர் திரையுலகில் சாதனை படைத்த கதைபட மூலாதாரம்,Ramkumar27/Wikimedia Commons
கையில் குழந்தையுடன் வாய்ப்பு தேடிய இளம்பெண்
திருமணமாகி குழந்தையும் பிறந்திருந்த நிலையில், திரைப்படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு பெறுவது அந்தக் காலகட்டத்தில் எளிதான விஷயமல்ல. ஆனால் குடும்ப வறுமை அவரை அந்தத் தடைகளை மீற வைத்தது.

கைக்குழந்தையுடன் சென்னை வந்து தயாரிப்பாளரைச் சந்தித்து சினிமாவில் வாய்ப்பு கேட்டதாக அவர் தனது முந்தைய பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். "திருமணமாகிவிட்டது, குழந்தையும் இருக்கிறது என்பதால் கதாநாயகியாக நடிப்பது சாத்தியமில்லை என்ற தயக்கம்" தனக்கு ஆரம்பத்தில் இருந்ததாகவும், ஆனால் தனது குடும்ப சூழ்நிலையை அவர் எடுத்துக் கூறிய பிறகு கிடைத்த பரிந்துரையே அவரது வாழ்க்கையை மாற்றியதாகவும் பகிர்ந்துள்ளார்.

"சௌகார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் எனக்கு ரூ.2,500 சம்பளம் கொடுத்தார்கள். குடும்ப கஷ்டத்தில் இருந்து மீள்வதற்காகவே சினிமாவுக்கு வந்தேன்" என்று தனது ஆரம்பக்கால திரைப்பயணத்தை அவர் பின்னாளில் நினைவுகூர்ந்திருந்தார்.

ஒரு திரைப்படம் கொடுத்த நிரந்தர அடையாளம்
கடந்த 1950ஆம் ஆண்டு எல்.வி.பிரசாத் இயக்கத்தில் வெளியான தெலுங்கு திரைப்படமான 'ஷாவுக்காரு' மூலம் ஜானகி கதாநாயகியாக அறிமுகமானார். என்.டி.ராமாராவ் நடித்த அந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது. படத்தின் பெயரான 'ஷாவுக்காரு' அவரது பெயருடன் இணைந்தது. அதன் பிறகு ஜானகிகு, திரைப்பட உலகில் 'சௌகார் ஜானகி' என்ற பெயரே நிலைத்துவிட்டது.

தமிழில் 'வளையாபதி' திரைப்படம் அவரது ஆரம்பக்கால முக்கியப் படமாக அமைந்தது. அந்தப் படத்தில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய வசனங்களைப் பேசி நடித்தார். தொடர்ந்து ஜெமினி, ஏவிஎம் போன்ற முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன.

'படிக்காத மேதை', 'பாலும் பழமும்', 'பார்த்தால் பசி தீரும்', 'புதிய பறவை', 'நீர்க்குமிழி', 'பாமா விஜயம்', 'எதிர்நீச்சல்', 'உயர்ந்த மனிதன்', 'இரு கோடுகள்' எனத் தொடர்ச்சியாக பல முக்கியமான படங்களில் நடித்தார்.

சௌகார் ஜானகி: வறுமையில் கைக்குழந்தையுடன் வாய்ப்பு தேடியவர் திரையுலகில் சாதனை படைத்த கதைபட மூலாதாரம்,AVM Pictures
சோகம் முதல் நகைச்சுவை வரை
சௌகார் ஜானகியின் நடிப்புப் பயணத்தில் அவரது கதாபாத்திரங்களின் பரந்துபட்ட தன்மையே குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்கியது. ஆரம்பத்தில் சோகமான மற்றும் உணர்ச்சிமிக்க பாத்திரங்கள் அவருக்கு அதிகமாகக் கிடைத்தாலும், அதற்குள்ளேயே அவர் தன்னை மட்டுப்படுத்திக்கொள்ளவில்லை.

காதல், பாசம், கோபம், கம்பீரம், நகைச்சுவை எனப் பல்வேறு உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தும் நடிகையாக மாறினார். 'உயர்ந்த மனிதன்' படத்தில் உயர்ந்த சமூக அந்தஸ்துடைய பெண்மணியாகவும், 'இரு கோடுகள்' படத்தில் மாவட்ட ஆட்சியராகவும், 'ஒளிவிளக்கு' படத்தில் விதவைப் பெண்ணாகவும், 'படிக்காத மேதை' படத்தில் சிவாஜியின் அப்பாவி மனைவியாகவும் நடித்தார்.

அதே நடிகை, 'எதிர்நீச்சல்', 'பாமா விஜயம்' போன்ற படங்களில் நகைச்சுவையையும் எளிதாகக் கையாள்ந்தார். ரஜினிகாந்த் நடித்த 'தில்லு முல்லு' திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய நகைச்சுவை நடிப்பு, புதிய தலைமுறை ரசிகர்களிடமும் அவருக்குத் தனி அடையாளத்தை ஏற்படுத்தியது.

எம்.ஜி.ஆர் முதல் ரஜினி, கமல் வரை
சௌகார் ஜானகியின் திரைப்பயணம் தென்னிந்திய சினிமாவின் பல தலைமுறைகளை இணைத்துள்ளது. தமிழில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார் ஆகியோருடன் நடித்தார். பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அடுத்த தலைமுறை நட்சத்திரங்களுடனும் திரையைப் பகிர்ந்துகொண்டார்.

தெலுங்கில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், கன்னடத்தில் ராஜ்குமார், மலையாளத்தில் பிரேம் நசீர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 390க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்ததாக அவரது வாழ்க்கைக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

சௌகார் ஜானகி: வறுமையில் கைக்குழந்தையுடன் வாய்ப்பு தேடியவர் திரையுலகில் சாதனை படைத்த கதைபட மூலாதாரம்,@sikarthi fb
பாலசந்தருடன் நீண்ட தொடர்பு
இயக்குநர் கே.பாலசந்தரின் படைப்புலகிலும் சௌகார் ஜானகிக்கு முக்கிய இடம் இருந்தது. பாலசந்தரின் முதல் திரைப்படமான 'நீர்க்குமிழி'யில் அவர் நடித்தார். தொடர்ந்து 'பாமா விஜயம்', 'எதிர்நீச்சல்' உள்ளிட்ட படங்களிலும் இடம்பெற்றார்.

நடிகையாக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் முயன்றார். கே. பாலசந்தர் இயக்கத்தில் ஜெமினி கணேசன் நடித்த 'காவியத் தலைவி' திரைப்படத்தைத் தயாரித்து, அதில் இரட்டை வேடங்களிலும் நடித்தார். அவர் தயாரித்தவற்றில், 'ரங்கராட்டினம்' என்ற திரைப்படமும் ஒன்று.

இது மட்டுமின்றி திரைப்படங்களுடன் அவரது கலைப் பயணம் முடிந்துவிடவில்லை. கே.பாலசந்தரின் நாடகங்கள் உள்ளிட்ட பல மேடை நாடகங்களிலும் அவர் நடித்துள்ளார். அவர் 300க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். மிகவும் பிஸியான திரைப்பட நடிகையாக இருந்தபோதும் 1960களில் தொடங்கிய அவரது நாடகப் பயணமும் ஒருபுறம் சீராக நீண்ட காலம் தொடர்ந்தது.

மனதில் பட்டதைப் பேசும் துணிவு
திரைக்கு வெளியிலும் சௌகார் ஜானகி தனது வெளிப்படையான பேச்சுக்காக அறியப்பட்டார். எந்த விஷயமாக இருந்தாலும் மனதில் பட்டதைத் துணிவுடன் பேசும் குணம் அவருக்கு இருந்ததாக அவரது வாழ்க்கை குறித்த பதிவுகள் குறிப்பிடுகின்றன.

ஜெமினி நிறுவனம் தயாரித்த 'ஒளி விளக்கு' திரைப்படத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் நடித்தபோது, பெயர் இடம்பெறும் முன்னுரிமை தொடர்பாக எஸ்.எஸ்.வாசனிடம் தனது உரிமைக்காக அவர் குரல் கொடுத்துள்ளார்.

சௌகார் ஜானகி: வறுமையில் கைக்குழந்தையுடன் வாய்ப்பு தேடியவர் திரையுலகில் சாதனை படைத்த கதைபட மூலாதாரம்,AVM
அதேபோல், தனது காலத்தைச் சேர்ந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட்டபோது ஏற்பட்டதாக அவர் கருதிய தவறான சித்தரிப்புகளையும் வெளிப்படையாக விமர்சித்தார்.

தனது உடைகள், கார் பெட்ரோல், உணவு உள்ளிட்ட பல செலவுகளையும் தனது சொந்த செலவிலேயே மேற்கொண்ட தொழில்முறை ஒழுக்கத்தைக் கடைபிடித்த நடிகையாகவும் அவருடன் பணியாற்றியவர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.

விருதுகளால் அங்கீகரிக்கப்பட்ட கலை வாழ்க்கை
சௌகார் ஜானகியின் நீண்டகால கலைப் பங்களிப்புக்கு பல்வேறு விருதுகள் கிடைத்தன. 'இரு கோடுகள்' திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது பெற்றார்.

கலைமாமணி, எம்.ஜி.ஆர். விருது, தெலுங்கு திரைப்படங்களுக்கான நந்தி விருதுகள், ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது, SIIMA வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல கௌரவங்களையும் பெற்றார். கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

சௌகார் ஜானகி: வறுமையில் கைக்குழந்தையுடன் வாய்ப்பு தேடியவர் திரையுலகில் சாதனை படைத்த கதைபட மூலாதாரம்,GODL
பத்மஸ்ரீ கிடைத்தபோது, நீண்டகாலம் சினிமாவில் இருந்தாலும் எதையும் எதிர்பார்த்து உழைக்கவில்லை என்று அவர் கூறியிருந்தார். தமிழ் சினிமா தனக்குப் பெரியளவில் புகழையும் ரசிகர்களையும் வழங்கியதாக நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

அப்போது அவர் கூறிய ஒரு வரி, அவரது வாழ்க்கையின் அடையாளமாகவே பார்க்கலாம்: "ஒரே இடத்துல நின்றுவிடுவதல்ல வாழ்க்கை. அப்படியே நகர்ந்துபோவதுதான் வாழ்க்கை."


அவரது வயது அதிகரித்த பிறகும் சௌகார் ஜானகி நடிப்பில் இருந்து முழுமையாக விலகவில்லை.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கிய, கார்த்தி - ஜோதிகா நடித்த 'தம்பி' திரைப்படத்தில் பாட்டி பத்மா கதாபாத்திரத்தில் நடித்தார். 2020இல் ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்த 'பிஸ்கோத்' திரைப்படத்திலும் நகைச்சுவை கலந்த முக்கியப் பாத்திரத்தில் தோன்றினார்.

குடும்ப வறுமையில் இருந்து மீள்வதற்காக கைக்குழந்தையுடன் வாய்ப்பு தேடி வந்த இளம் பெண், பிற்காலத்தில் தென்னிந்திய சினிமாவின் பல தலைமுறைகளை நேரில் கண்ட நடிகையாக மாறினார். கருப்பு-வெள்ளை சினிமாவின் கதாநாயகியாகத் தொடங்கிய அவரது பயணம், ரஜினி, கமல் தலைமுறையைக் கடந்து புதிய நூற்றாண்டின் திரைப்படங்களிலும் தொடர்ந்தது.

ஒரு நடிகையின் வாழ்க்கை எத்தனை முறை மாற்றங்களைச் சந்திக்க முடியும் என்பதற்கான உதாரணமாக சௌகார் ஜானகியின் திரைப் பயணம் இருக்கிறது. கதாநாயகியாக இருக்க வேண்டுமென்ற ஒரே அடையாளத்திற்குள் அவர் தன்னைச் சுருக்கிக் கொண்டு நின்றுவிடவில்லை. ஒவ்வொரு வயது மற்றும் காலத்திற்கும் ஏற்ப தனக்குக் கிடைத்த கதாபாத்திரங்களை ஏற்றுக் கொண்டு நடித்தார்.

அதனால்தான் சௌகார் ஜானகியின் மறைவு ஒரு மூத்த நடிகையின் மறைவாக மட்டுமல்லாமல், தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவின் எழுபது ஆண்டுக்கால வரலாற்றைத் தனது நடிப்பின் வழியாகச் சுமந்து சென்ற ஒரு தலைமுறையின் விடை பெறுதலாகவும் நிற்கிறது.