முகத்துவாரம், கஜீமா தோட்டத்தில் சட்டவிரோத வீடுகள் அகற்றம்: மக்கள் கடும் எதிர்ப்பு





கொழும்பு, முகத்துவாரம் – பெர்கியூஸன் வீதியின் கஜீமா தோட்டத்தில் இன்று சட்டவிரோத வீடுகள் அகற்றப்பட்டன.

வீடுகளை அகற்றுவதற்கு அங்கிருந்த மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

கஜீமா தோட்டத்தில் உறுதிப்பத்திரம் இல்லாத சிலர் அங்கு வீடுகளை அமைத்து வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலத்தில் குடிசை வீடுகளில் வாழ்வோருக்கு வீடுகளை வழங்கும் போது அதன் உரிமையாளர்களுக்கே வீடுகள் கிடைத்தன.

அதனால் சில வீடுகளை வாடகைக்குப் பெற்றிருந்தவர்களுக்கு குடிசைகளை அகற்றும் போது அங்கிருந்து வெளியேற வேண்டி ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் மீண்டும் கஜீமா தோட்டத்திற்கு வந்து குடியேறியுள்ளனர்.

வீடுகள் அகற்றப்பட்டபோது அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும், மக்ககள் அமைதியற்ற முறையில் நடந்து கொண்டதுடன் பெக்கோ இயந்திரங்கள் மீது கற்களாலும் தாக்குதல் மேற்கொண்டனர்.

பின்னர் அவர்கள் முகத்துவாரம் சந்திக்குச் சென்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

குறித்த பகுதியில் வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வாடகைக்கு இருந்தவர்களுக்கு புதிய வீடுகளை வழங்கும் இயலுமை இல்லை என்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் தலைவர் ரஞ்சித் பெர்ணேன்டோ தெரிவித்தார்.