தெலைபேசி விற்பனை நிலையத்தில் கைப்பையை திருடிய பெண்




(க.கிஷாந்தன்)

கையடக்கத் தொலைபேசி ஒன்றை கொள்வனவு செய்வதற்காக வருகைதந்து,  சக வாடிக்கையாளரது கைப்பையை திருடிச் சென்ற பெண்ணை கைது செய்வதற்கு பொலிஸார் வலைவீசியுள்ளனர்.

அட்டன் நகரிலுள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் இந்த சம்பவம் 19.02.2016 அன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த தொலைபேசி விற்பனை நிலையத்திற்கு வருகைதந்த சந்தேக நபரான பெண், மற்றவரது பையை திருடிச் செல்லும் போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கமராவில் காணொளி பதிவாகியுள்ளது.

இதனை பயன்படுத்தி குறித்த பெண்ணை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த கைப்பையில் வீட்டிற்குத் தேவையான சிறிய மின்குமிழ்கள் காணப்பட்டதாக தெரிவித்த அதன் உரிமையாளர் அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை அட்டன் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்