சிறைச்சாலைகள் நீதிமன்றத்தை மீள ஆரம்பிக்க வேண்டுகோள்



சிறைச்சாலைகள் நீதிமன்ற செயற்பாடுகளை மீள ஆரம்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நீதி அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாதாள நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்ட முக்கிய சந்தேக நபர்களுடன் தொடர்புடைய வழக்குகளை
இந்த சிறைச்சாலைகள் நீதிமன்றத்தின் மூலம் விசாரணை செய்ய முடியும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துசார உப்புல் தெனிய தெரிவித்தார்.
தெமட்டகொட சமிந்த கடந்த வாரம் சிறைச்சாலைகள் பேருந்தில் கொண்டு வரப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு பாதாள நடவடிக்கைகள் காரணமாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலையை அண்மித்த பகுதியில் காணப்படும் சிறைச்சாலைகள் நீதிமன்றம் கடந்த 2 வருடங்களாக செயற்பாடற்றுக் காணப்படுகின்றது.
இதேவேளை, கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களின் அடிப்படையில் கைதிகளை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் போது பொலிஸாரின் உதவியுடன் பாதுகாப்பினை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துசார உப்புல் தெனிய குறிப்பிட்டார்.