புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் கட்டமைப்பை உருவாக்குவதெற்கென பாராளுமன்றத்தால் அண்மையில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட அரசியலமைப்பு சபையின் முதலாவது உத்தியோகபூர்வ அமர்வு இன்று இடம்பெற்றது.44 வருடங்களுக்கு பின்னர் முழு பாராளுமன்றமும் அரசியலமைப்பு பேரவையாக தற்பொழுது கூடியுள்ளமை விசேட அம்சமாகும்.
இதன் போது அரசியலமைப்பு சபைக்காக 7 உப தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டதோடு, நடவடிக்கை குழுவுக்கு 21 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதற்கமைய அரசியலமைப்பு சபைத் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களான உறுப்பினர்களாக திலங்க சுமதிபால, கபீர் ஹாஷிம், சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே, செல்வம் அடைக்கலநாதன், திலக் மாரப்பன, மஹிந்த யாப்பா அபேவர்தன, நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் உப தலைவர்களாக செயற்படவுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் 21 உறுப்பினர்கள் அடங்கிய செயற்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியல்ல, நிமல் சிறிபால டி. சில்வா, ரவுப் ஹகீம், விஜேதாச ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த, ரிஷாத் பதியுதீன், சம்பிக்க ரணவக்க, டி.எம். சுவாமிநாதன், மனோ கணேசன், மலிக் சமரவிக்ரம, ஆர். சம்பந்தன், அனுர குமார திஸாநாயக, டிலான் பெரேரா, தினேஷ் குணவர்தன, ஜயம்பதி விக்ரமரத்ன, எம். ஏ. சுமந்திரன். துசிதா விஜேமான்ன, பிமல் ரத்நாயக, பிரசன்ன ரணதுங்க மற்றும் டக்லஸ் தேவானந்தா ஆகியோர் செயற் குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
