#இலங்கை: மனித உரிமை மீறல் புகார்கள் அதிக அளவு பொலிசுக்கு எதிரானவை



இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பதிவாகும் புகார்களில் அதிகமானவை காவல் துறைக்கு எதிரானவை என இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவி கலாநிதி தீபிகா உடுகம தெரிவித்துள்ளார்.

'சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி' என்ற தொனிப்பொருளில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபாதை பேரணி இன்று கொழும்பில் நடைபெற்றது.
சித்திரவதையை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிப்பதற்காக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடைபாதை பேரணியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அமைச்சர்கள், அரச உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
நாட்டில் மனித உரிமை மீறல்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதை பலர் தவிர்த்து வருகின்றனர் என இந்த பேரணியின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தீபிகா உடுகம கூறினார்.
இந்த நிலைமை மாற வேண்டும் எனக் கோரிய அவர், இதற்கு போலிஸ் ஆணையத்தின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது எனவும் சுட்டிக்காட்டினார்.