கடலுக்குள் படகைத் தள்ளிவிடும் மீனவத் தொழிலாளியொருவர், கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (03) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கடலுக்குச் செல்லும் படகுகளை, கடலுக்குத் தள்ளிவிடும் தொழிலில் ஈடுபடும் ஏறாவூர்-தளவாய், சின்னத்தம்பி வீதியைச் சேர்ந்த கிட்ணபிள்ளை கண்ணன் (வயது 35) என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டள்ளார். சனிக்கிழமை (02) இரவு, தளவாய் கடற்கரைக்குச் சென்று,
வழமைப் போல் படகுகளை தள்ளிவிடும் தொழிலில் ஈடுபட்டிருந்துள்ளார். குறித்த நபரும் மற்றொரு நபரும் இணைந்து படகொன்றை தள்ளிவிட்ட பின்னர், கரைக்குத் திரும்பும் போது, தன்னுடன் வந்த கிட்ணபிள்ளையை காணவில்லை என்று மற்றைய நபர் தேடியுள்ளார். எனினும் அவர் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (03) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர்,
சம்பவ தினத்தன்று அதிகளவு மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இறந்தவரின் மனைவி மத்திய கிழக்கு நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார் என்றும் இவருக்கு 4 பிள்ளைகள் உண்டு என்றும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

