சிங்களத் திரையுலகின் புகழ்பூத்த பிரபல நடிகையான மாலனி பொன்சேகாவினது திரையுலக வாழ்வின் 50 ஆண்டுகால சேவைப் பாராட்டு விழா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (22) பிற்பகல், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
ஈடிணையற்ற கதாபாத்திரங்களையும் படைப்புகளையும், உயிரோட்டத்துடன் திரையொளியில் காண்பிக்கும் திரைக்காவியங்களில், தனது அற்புத நடிப்பை வெளிக்காட்டியதுடன், தனக்கே உரித்தான ஒரு நடிப்புப் பாணியை, கலைத்துறையில் உருவாக்கிக்கொண்டு, சிங்கள திரைப்படத் துறைக்கு அரும் பணியாற்றிய பிரபல சினிமா நடிகையான கலாநிதி மாலினி பொன்சேகாவின் ஐம்பதாண்டுகால கலைச் சேவையைப் பாராட்டும் முகமாக, கலாநிதி மாலினி பொன்சேக்கா மன்றத்தினால், இந்தப் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தப் பொன் விழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி, மாலினி பொன்சேகாவுக்கு விசேட பரிசிலும் நிதி அன்பளிப்பும் வழங்கினார்.
பிரபல இந்தியத் திரைப்பட விமர்சகர் சோமா செட்டர்ஜி அம்மையார், இதன்போது நினைவுரை ஆற்றியதுடன், பிரபல திரைப்பட இயக்குநர் அசோக்க ஹந்தகம, சிறப்புரை ஆற்றினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அர்ஜுன ரணதுங்க, லசந்த அழகியவண்ண, பந்துல குணவர்தன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, அசேல இத்தவெவ, புத்திஜீகள், கலைஞர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.


Post a Comment
Post a Comment