(ரீல்/ரியல்) ஜோடிகளில் உங்கள் ஃபேவரைட் யார்?!




அஜித் - ஷாலினி



அஜித்தும் ஷாலினியும் முதன்முறையாக `அமர்க்களம்’ படப்பிடிப்பில்தான் பார்த்துக்கொண்டார்கள். படப்பிடிப்பின் போது, ஒரு காட்சியில், `ஏய்!' என்ற அலறலோடு அஜீத் கத்தியைக் காற்றில் வீச, எதிரே இருந்த ஷாலினி கையில் பட்டு கையில் ரத்தக்கோடு ஏற்படுத்தி விட்டது. `கட்! கட்!' என மொத்த யூனிட்டும் பதறிப்போனது. அஜீத் செய்த ஆர்பாட்டத்தில், சில நிமிடங்களில் ஒரு ஆஸ்பத்திரியே யூனிட்டுக்கு வந்துவிட்டது. `தனக்கு ஒண்ணுன்னா இவ்ளோ துடிச்சிப் போறாரே' என்று, அஜித்தின் மீது ஷாலினிக்கு பிரியம் பிறந்தது அந்தத் தருணத்தில்தான். அதன்பிறகு அஜித் ஷாலினியிடம், `நான் உன்னைக்  கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்’ என்று சொல்லிவிட்டு, என்ன பதில் வருமோ என்ற பதற்றத்தில் இருக்க, `எனக்கு ஓ.கே. அப்பாவிடம் பேசிவிடுங்கள்' என்று ஷாலினி பச்சை சிக்னல் காட்ட, கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சூர்யா - ஜோதிகா



சூர்யாவின் ஐந்தாவது படமான `பூவெல்லாம் கேட்டுப்பார்' - இல்தான் சூர்யா - ஜோதிகா ஜோடி முதன்முதலாக கைகோத்தது. படத்தின் டெஸ்ட் ஷூட்டீன் போது இயக்குநர் வசந்த் சூர்யாவிடம், ``சரவணா, இதுதான் ஜோ. உன்னோட ஹீரோயின். நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிக்கங்க. ஏன்னா இது ரொமான்டிக் மூவி!’’ என ஜோதிகாவை அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். ஜோவின் அந்த முதல் பார்வையிலும் புன்னகையிலும்  சூர்யா காலியாகிவிட, `நாம இப்போ ஃப்ரெண்ட்ஸ்!’ என சகஜமாக கைகுலுக்கிப் பேசியிருக்கிறார் ஜோ. சூர்யாவுக்கு மிகப்பெரிய ப்ரேக் கொடுத்த `நந்தா' திரைப்படம் வெளியான போது, படத்தைப் பார்ப்பதற்காக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் ஜோதிகா. அதன்பிறகு இணைந்த `காக்க காக்க ' திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருவரும் காதலை பகிர்ந்து கொண்டனர். மதம், மொழி எனப் பல தடைகளைத் தாண்டி பெற்றோர்களின் சம்மதத்துடன் 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் நாள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

`பூவெல்லாம் கேட்டுப்பார்’, `உயிரிலே கலந்தது’, `காக்க காக்க’, `பேரழகன்’, `மாயாவி’, `சில்லுனு ஒரு காதல்’ எனப் பல எவர்கீரின் படங்களைக் கொடுத்த இந்த ஜோடி `சில்லுன்னு ஒரு காதல்' படத்துக்குப் பிறகு இணையவில்லை. 12 வருடங்களாக நிஜ வாழ்வில் வெற்றிகரமாக வலம்வரும் இந்த ஜோடி, மீண்டும் வெள்ளித்திரையில் இணைய வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. கூடிய சீக்கிரம் நடக்கும் என நாமும் எதிர்பார்ப்போம்.

பிரசன்னா - சினேகா



`அச்சமுண்டு அச்சமுண்டு’  படப்பிடிப்பு  அமெரிக்காவில் நடந்துகொண்டிருந்த போது ஷூட்டிங்கில் பிரசன்னாவும் சினேகாவும் சும்மா பேச ஆரம்பிக்க, அப்படியே நெருங்கிய நண்பர்களானார்கள். ஷூட்டிங் முடிந்த பிறகும் கூட ஒருநாள் விடாமல் தொடர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருக்க, தாமதமாகத்தான் இது காதல் என உணர்ந்தனர் இருவரும். `கோவா’ படத்தில் சினேகாவுக்கு பிரசன்னா  கணவனாக  கெஸ்ட் ரோலில் நடிக்க, அது ஏற்கெனவே உலாவந்து கொண்டிருந்த கிசுகிசுகளுக்கு  உரமாக அமைந்தது. கிசுகிசுவோடு சேர்ந்து இவர்களது காதலும் உச்சத்துக்குப் போக, 2012-ம் ஆண்டு சினேகாவைத் திருமணம் செய்து கொண்டார் பிரசன்னா. `அச்சமுண்டு அச்சமுண்டு' மற்றும் `கோவா' படங்களுக்குப் பிறகு  சில விளம்பரங்கள் மற்றும் ஃபேஷன் ஷோக்களில் சினேகா, பிரசன்னா இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

நாகசைதன்யா - சமந்தா



`விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில் த்ரிஷா வேடத்தில் சமந்தா நடித்தார். சிம்பு கதாபாத்திரத்தில் நாகசைதன்யா. அந்தத் திரைப்படத்தில் நடித்த போதுதான் நாகசைதன்யாவுடன் சமந்தாவுக்குக் காதல் ஏற்பட்டது. பல வருடங்களாக  நாகசைதன்யாவும் சமந்தாவும் ரகசியமாக வளர்த்து வந்த காதல், இரு வீட்டுப் பெற்றோர்களுக்கும் தெரியவந்த நிலையில், அவர்கள் காதலை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்துவைக்க சம்மதித்தனர். சமந்தா, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். நாகசைதன்யா, இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களின் திருமணம் இந்து-கிறிஸ்தவ முறைப்படி இரண்டுமுறை  நடந்தது. `ஏ மாய சேசாவே', `மனம்’, `ஆட்டோநகர் சூர்யா' எனப் பல படங்களில் வொர்க் அவுட் ஆன இவர்களது கெமிஸ்ட்ரி நிஜ வாழ்க்கையிலும் நன்றாகவே 'வொர்க் அவுட்' ஆகி மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது.

மேற்குறிப்பிட்ட  தம்பதிகள் மட்டுமல்லாது, சரத்குமார் - ராதிகா , பாக்யராஜ் - பூர்ணிமா எனப் பல தம்பதிகள் நிழலோடு நிற்காமல் நிஜத்திலும் இணைந்திருக்கிறார்கள். இவர்களில் யார் உங்களுக்கு ஃபேவரைட் என்பதை கமென்ட் செய்யுங்களேன்.