வெள்ளத்தில் மிதக்கிறது,வட மாகாணம்


இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை வழங்குமாறு இலங்கையின் இராணுவத்தளபதி, வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு ஜானதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர உத்தரவினை விடுத்துள்ளார்.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வெள்ளம் காரணமாக 13,646 குடும்பங்களை சேர்ந்த 44,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2661 குடும்பங்களை சேர்ந்த 8539 பேர் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து 52 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அனைத்து குளங்களும் வான்பாய்வதனால் அதனை அண்டியுள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வெள்ளத்தினால் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளதுடன் ஆயிரக் கணக்கான ஏக்கர் நெற்செய்கையும் அழிவடைந்துள்ளது. சில இடங்களில் வெள்ளம் காரணமாக போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப் பெரிய நீர்பாசன குளமான இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளமையினால் அதிக நீர் வெளியேறுகின்ற காரணத்தால் தாழ் நில பிரதேசங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.