விபத்தில் உயிரிழந்த 10 பேரின் உடல்களும் உறவினர்களிடம்


பதுளை - மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 10 பேரினதும் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

திடீர் மரண பரிசோதனைகளின் பின்னர் நேற்று இரவு ஒப்படைக்கப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். 

வேன் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேற்று (17) அதிகாலை 1.30 மணியளவில் மோதி ஏற்பட்ட விபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் உயிரிழந்னர். 

விபத்தில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த இரட்டைக் குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தமை மட்டக்களப்பு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

வேனில் பயணித்தவர்கள் கடந்த திங்கட்கிழமை கொழும்பில் உள்ள உறவினர்களின் வீட்டுக்கு சென்று விட்டு அம்பாறையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வேன் ஓட்டுனருக்கு நித்திரை ஏற்பட்டு பாதையில் பிழையான பக்கத்தால் பயணித்தால் குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்