ரூ. 20 மில். நட்டஈடு வழங்க நொதர்ன் பவர் நிறுவனத்துக்கு உத்தரவு


சுன்னாகம் பிரதேசத்தின் நிலக்கீழ் நீரை மாசுபடுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதனால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு, 200 இலட்சம் (20 மில்லியன்) ரூபாயை நட்டஈடாக வழங்குமாறு, சுன்னாகம் நொதர்ன் பவர் மின்னுற்பத்தி நிறுவனத்துக்கு, உயர் நீதிமன்றம் இன்று (04) தீர்ப்பளித்தது.
சுற்றுச்சூழல் ஆர்வலரான, பேராசிரியர் ரவீந்திர காரிவசம் என்பவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவுக்கே, இன்றைய தினம், மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த நொதர்ன் பவர் தனியார் மின்னுற்பத்தி நிறுவனத்தின் செயற்பாடுகள் காரணமாக, நிலக்கீழ் நீரில், எண்ணெய், கிரீஸ் போன்ற கழிவுகள் கலக்கப்பட்டதால், குறித்த பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனால், குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 500 குடும்பங்களுக்கு, அதிகபட்சமாக, 40 ஆயிரம் ரூபாய் வீதம் பகிரும் வகையில், இந்த நட்டஈட்டை வழங்குமாறு, உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.