அக்கரப்பத்தனை பொல்மோரல் தோட்டத்திற்கு வீடுகள் வழங்கப்படாதது ஏன்?


(க.கிஷாந்தன்)
கடந்த வருடம் ஜுன் மாதம் 13 ம் திகதி அக்கரபத்தனை பெல்மோரல் தோட்டத்தின் தொழிலாளர்களின் குடியிருப்பு தொகுதி தீ விபத்தினால் பாதிக்கப்பட்டது. இவ்வாறு தீ விபத்தினால் வீடுகள் பாதிக்கபட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் இன்று வரை பாதிகப்பட்டவர்களுக்கான வீடுகளை ஏன் அமைத்து கொடுக்கவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
04.07.2019 அன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
குறித்த தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் அத்தோட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்ட அமைச்சுகள், இடர் முகமைத்துவ நிலையங்கள் உட்பட பல அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர் என அந்த தோட்ட நிர்வாகம் தனக்கு அறிவித்துள்ளது என தெரிவித்த அவர் இதுவரை காலமும் பாதிக்கபட்ட இம்மக்களுக்கு வீடமைத்து கொடுப்பதில் கவனம் செலுத்தப்படாமைக்கு காரணம் என்னவென்று மேலும் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த தோட்டத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு குடியிருப்புகளை அமைத்துக் கொடுப்பதற்காக அத்தோட்ட நிர்வாகம் குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கு இடங்களை ஒதுக்கியுள்ளது. இந்த நிலங்களில் வீடமைப்பதற்கு உகந்ததா ? என்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் சான்றிதழ்களும் பெறப்பட்டு அச்சான்றிதழ்களை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பார்வைக்கும் வழங்கியுள்ளது.
இவ்வாறு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ள போதிலும் பாதிக்கபட்ட மக்களுக்கு இதுவரை வீடுகள் அமைத்து கொடுக்காத காரணத்தால் இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இருந்த போதிலும் இந்த அரசாங்கத்தினால் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்துக் வழங்கப்பட்டு வருவதாக கூறுகின்ற போதிலும் ஒரு வருட காலமாக தமது குடியிருப்புகளை இழந்துள்ள அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்ட மக்களுக்கு ஏன் இதுவரை வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை.
ஆகையால் இது தோடர்பில் அம்மக்களுக்குரிய வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக அரசாங்கத்திற்கும் சம்மந்தப்பட்ட அமைச்சு மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு இ.தொ.கா கொண்டு வரும் அதேவேளையில் வீடுகளை அமைப்பதற்காக அத்தோட்ட நிர்வாகம் மேலும் மேலும் கடிதங்கள் ஊடாக கேட்டுக்கொள்வதை செவிமடுக்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுப்பதாகவும் அவர் மேலும் தரிவித்தார்.