சீன மக்கள் குடியரசு உதயமானதன் வரலாறு


சீன கம்யூனிச அரசு உருவான 70ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அந்நாட்டில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. நாட்டுக்காக உழைத்தவர்களை நினைவுகூர்ந்துவரும் சீனா, தேசிய தினத்தை போற்றிவருகிறது. இந்நிலையில், சீனாவின் தொடக்கக்காலத்தை விவரிக்கிறது இந்த கட்டுரை.
சீன குடியரசின் குவோமின்டாங் படைகளை எதிர்த்து மக்கள் விடுதலைப் படையினர் (பி.எல்.ஏ.) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக அப்போது பீகிங் என்று அழைக்கப்பட்ட நகரில் டியானென்மன் சதுக்கத்தில் பல நூறாயிரம் சீனர்கள் 1949 அக்டோபர் 1 ஆம் தேதி கூடினர்.
சீன நேரத்தின்படி பிற்பகல் 3 மணிக்கு, தலைவர் மாவோ சே- துங் - இப்போது மாவோ ஜெடாங் என உச்சரிக்கப்படுகிறது - சீன மக்கள் குடியரசு (பி.ஆர்.சி.) உருவாக்கப்படுவதை அறிவிக்க, வரிசையாக இருந்த மைக்குகள் முன்னால் சென்றார். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த ராணுவ அணிவகுப்பு அப்போது தொடங்கியது. பி.ஆர்.சி. அமைக்கப்பட்டது, ரஷியப் புரட்சிக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூனிஸத்துக்குக் கிடைத்த பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது.
சோவியத் யூனியனுக்கும் சீன கம்யூனிஸ்ட்களுக்கும் இடையிலான சுமுக உறவுகளுக்கு எந்த அளவுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது என்பது பற்றி அப்போதைய பிபிசி கண்காணிப்புப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் ஜின்குவா - பிபிசி கண்காணிப்பு ஆவணக் காப்பகத்தில் புதிய சீன செய்தி ஏஜென்சி என குறிக்கும் வகையில் என்.சி.என்.ஏ., என குறிப்பிடப்பட்டுள்ளது - சீனா (மக்கள் தினசரி) மற்றும் ரஷிய (பிராவ்டா) கம்யூனிஸ்ட் கட்சிகளின் அதிகாரப்பூர்வ பத்திரிகைகள் போன்ற ஊடகங்களில் வெளியான செய்திகள், கட்டுரைகள், கடிதங்கள் , உரைகளில் இருந்து மேற்கோளாக எடுக்கப்பட்ட சமகாலத்தைய கருத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அறிவிக்கை மற்றும் அணிவகுப்பு

என்.சி.என்.ஏ. (இப்போது ஜின்குவா செய்தி ஏஜென்சி), 1949 அக்டோபர் 1:
சீன மக்கள் குடியரசு உதயமானதன் வரலாறுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
``பீகிங்கில் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற்ற 200,000 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பிரமாண்டமான பேரணியில், சீன மக்கள் குடியரசின் மத்திய மக்கள் அரசாங்கம் அமைக்கப்பட்டதை தலைவர் மாவோ ஜெடாங் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கை செய்தார். மத்திய மக்கள் அரசின் ஆறு துணைத் தலைவர்களுடன் தனது இருக்கையில் அமர்வதற்குத் தலைவர் மாவோ வந்தபோது கரவொலி விண்ணைப் பிளந்தது.
அரசு கவுன்சிலின் மற்ற உறுப்பினர்கள், பி.பி.சி.சி.யின் [மக்கள் அரசு ஆலோசனை அமைப்பு]பிரதிநிதிகள் மற்றும் சோவியத் கலாச்சார தூதுக் குழுவின் உறுப்பினர்கள் மேல்தளத்தில் மாவோ -விற்குப் பின்னால் அமர்ந்திருந்தனர். மத்திய மக்கள் அரசாங்கத்தின் முதலாவது அறிவிக்கையைப் படிப்பதற்காக மாவோ எழுந்து வந்தார். அந்த நிகழ்ச்சி சீனாவின் அனைத்துப் பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் ஒரே நேரத்தில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
``சியாங் கய்-ஷெக் அரசாங்கம் [சீனக் குடியரசின் அரசாங்கம், இப்போது அதன் கட்டுப்பாடு தைவான் தீவுகள் வரை என சுருங்கிவிட்டது] தந்தை நாட்டுக்குத் துரோகம் செய்யத் தொடங்கியதில் இருந்து மக்கள் பட்ட துயரங்களைக் குறிப்பிட்டு மாவோ தொடங்கினார்; இருந்தபோதிலும், இப்போது மக்கள் விடுதலைப் போராட்டம் அடிப்படையில் வெற்றி பெற்று, பெரும்பான்மை மக்கள் விடுதலை பெற்றுவிட்டனர்...
``தொடர்ந்து பேசிய மாவோ, சீன மக்கள் குடியரசின் மக்கள் அனைவருடைய சட்டபூர்வமான ஒரே பிரதிநிதித்துவ அரசாங்கமாக இந்த அரசுதான் இருக்கும் என்பதை மற்ற நாடுகளின் அரசுகளுக்கு அறிவிக்கை செய்ய மத்திய மக்கள் அரசு கவுன்சில் முடிவு செய்துள்ளது என்று கூறினார். சமத்துவம், பரஸ்பர நலன் மற்றும் எல்லைகள் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பரஸ்பரம் மதித்தல் என்ற கோட்பாடுகளை ஏற்கத் தயாராக இருக்கும் எந்த ஒரு வெளிநாட்டுடனும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள இந்த அரசு தயாராக உள்ளது என்றும் கூறினார்.
சீன மக்கள் குடியரசு உதயமானதன் வரலாறுபடத்தின் காப்புரிமைPUBLIC DOMAIN
``அக்டோபர் 1 ஆம் தேதி மாபெரும் பேரணியில் படைகளை ஆய்வு செய்த பிறகு, பி.எல்.ஏ.வின் ஜி.எச்.க்யூ உத்தரவு ஒன்றை தலைமை கமாண்டர் ச்சூ டெஹ் படித்தார். சியாங் கய்-ஷெக் அரசுக்கு எதிராக நடைபெற்ற புரட்சிப் போரில் மகத்தான வெற்றி பெற்றமைக்காக மக்கள் விடுதலை படைக்கு அதில் பாராட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், அவர்களுடைய பணி அத்துடன் முடிந்துவிடவில்லை என்று அவர் நினைவுபடுத்தினார்.
அனைத்து கமாண்டண்ட்களும், வீரர்களும், மக்கள் விடுதலைப் படையின் அலுவலர்களும் மத்திய மக்கள் அரசு மற்றும் மக்களின் மகத்தான தலைவர் மாவோ உத்தரவுகளை உறுதியுடன் நிறைவேற்ற வேண்டும் என்று இதன் மூலம் உத்தரவிடுகிறேன். குவோமின்டாங்கின் எதிர்விளைவு படைகளை அழிப்பதற்கும், இன்னும் விடுவிக்கப்படாத அனைத்துப் பகுதிகளையும் விடுவிப்பதற்கும், அதேசமயத்தில் அனைத்து கொள்ளையர்கள் மற்றும் புரட்சிக்கு எதிரானவர்களை அழிப்பதற்கும், அவர்களுடைய எதிர்வினை செயல்கள் மற்றும் கலக முயற்சிகளை அடக்குவதற்கும் உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடுகிறேன் என்று கூறி அவர் நிறைவு செய்தார்.''
சீன ஊடகங்களின் செயல்பாடு குறித்து பிபிசி கண்காணிப்பு அறிக்கை 1-7 அக்டோபர் 1949:
``சீன கம்யூனிஸ வானொலியின் ஏறத்தாழ அனைத்து ஒலிபரப்புகளுமே அக்டோபர் 1 ஆம் தேதி பீகிங்கில் நடந்த மத்திய மக்கள் அரசின் அறிவிக்கை பற்றியதாக இருந்தது. அக்டோபர் 2 ஆம் தேதி சர்வதேச அமைதி தினம், அதற்கடுத்த நாட்களில் நடந்த சந்திப்புகளில் சோவியத் - சீன நட்புணர்வு சங்கம் முறைப்படி தொடங்கப்பட்டது பற்றியதாகவும் அது இருந்தது. இந்த அனைத்து தருணங்களிலும் சோவியத் யூனியன் மற்றும் சீனப் புரட்சிப் படைகளுக்கு இடையில் சுமுக உறவு குறித்த விஷயங்களில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.''
சீன மக்கள் குடியரசு உதயமானதன் வரலாறுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
பீப்பிள்ஸ் டெய்லி, 5 அக்டோபர் 1949:
``சீனர்களான நாங்கள் மாஸ்கோ குறித்து முழுமையாக அன்பும், உணர்வும் கொண்டிருக்கிறோம். பாட்டாளி வர்க்கத்தினரின் மகத்தான தலைவர்கள் மார்க்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகியோர், முதலாளித்துவம் மற்றும் நிலவுடமைத்துவம் ஆகியவற்றில் இருந்து எங்கள் நாட்டை விடுவிக்க வழிகாட்டுதலாக இருந்தனர். லெனின் பணிகளை ஸ்டாலின் தொடர்ந்து மேற்கொண்டார். ரஷியக் கூட்டமைப்பு இல்லாதிருந்தால், சீன மக்களால் இந்த மகத்தான வெற்றியைப் பெற முடிந்திருக்காது.''

வெளிநாட்டு உறவுகள்

பிராவ்டா, 5 அக்டோபர் 1949:
``இந்தக் குடியரசின் அறிவிக்கை தனித்துவமான வரலாற்று நிகழ்வு. 475,000,000 பலம் கொண்ட புகழ்மிக்க சீன மக்களின் வரலாற்றில் புதிதாக ஒரு பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. உள்நாட்டின் படைகள் மற்றும் சர்வதேச ஏகாதிபத்திய படைகளைக் கொண்ட கூட்டுப் படையினருக்கு எதிராக சீன ஜனநாயகப் படைகள் நடத்திய நீண்ட உறுதியான போர் முடிவுக்கு வந்துள்ளது.
உழைக்கும் வர்க்கத்தினர் மற்றும் போராட்ட குணம் கொண்ட கம்யூனிஸ்ட் முன்னணித் தலைவர்களால் முன்னின்று நடத்தப்பட்ட, சோஷலிஸம் மற்றும் ஜனநாயக முகாமில் இருந்து கிடைத்த தீவிர ஆதரவுடன், தேச துரோகம் இழைத்த, நிலபிரபுத்துவத்தின் அடக்குமுறை, காலனி ஆதிக்கத்தின் அதிகார துஷ்பிரயோக சிந்தனை கொண்ட காலமாக இருந்த குவோமின்டாங் முதலாளித்துவ ஆட்சி தூக்கி வீசப்பட்டது. தேசிய சுதந்திரத்தை அடைவதில் சீன ஜனநாயகம் வெற்றி பெற்றது.
சீன மக்கள் குடியரசு உதயமானதன் வரலாறுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
வெளிநாட்டு முதலீட்டுக்கு இரையாகிப் போய் ஏறத்தாழ நூறாண்டு காலம் அடிமையாக இருந்த நிலைமைக்கு அது முற்றுப்புள்ளி வைத்துவிட்டது...''
பி.ஆர்.சி.க்கு ரஷிய அரசு கடிதம், 2 அக்டோபர் 1949:
``சீனாவின் மத்திய மக்கள் அரசின் முன்மொழிவுகளைப் பரிசீலனை செய்த பிறகு, சீன மக்களுடன் மாற்றம் இல்லாத நிலையில் நட்புறவைப் பராமரிக்கும் உந்துதலுடனும், சீன மக்களின் ஏகோபித்த பெரும்பான்மையினரின் விருப்பங்களை சீனாவின் மத்திய மக்கள் அரசாங்கம் பெற்றிருக்கிறது என திருப்தி அடைந்திருப்பதாலும், சோவியத் யூனியனுக்கும் சீனாவின் மக்கள் குடியரசுக்கும் இடையில் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும், தூதர்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளவும் முடிவு செய்யப்படுகிறது.''