அழைப்பாணை


முன்னாள் கடற்படைத் தளபதியும் அண்மையில் அட்மிரல் ஒப் த ப்ளீட் ஆக பதவி உயர்வு பெற்ற வசந்த கரன்னகொட உள்ளிட்ட 14 கடற்படை அதிகாரிகளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு தமிழ் இளைஞர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, வழக்கினை விசாரிக்க நியமிக்கப்பட்ட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று (22) நோட்டிஸ் விடுத்துள்ளது.
சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவால், சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, பிரதிவாதிகள் 14 பேருக்கு எதிராக 667 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.