வறுமையால் இறந்த இளம்பெண்


ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிருக்கு போராடி கொண்டிருந்த இளம்பெண்ணுக்காக திரட்டப்பட்ட 10 லட்சம் யுவான் (சுமார் ஒரு கோடி இந்திய ரூபாய்) நிதியில் சொற்ப பணமே அவர் உயிரிழப்பதற்கு முன்பு வரை அளிக்கப்பட்ட சம்பவம் சீன மக்களிடையே கோபத்தைத் தூண்டியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் மூச்சுத் திணறலுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வு ஹுயானின் பின்னணி குறித்து தெரிந்த உடன் அவருக்கு அந்நாடு முழுவதுள்ள மக்கள் நிதியுதவி செய்தனர்.
சுமார் ஐந்தாண்டுகளுக்கு தொடர்ச்சியாக தினமும் சொற்ப பணத்தில் வாழ்க்கையை நடத்தி வந்த அவரது உடல் எடை வெறும் 20 கிலோதான்.
தன் தந்தையும், பாட்டியும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குரிய பணமில்லாததால் அவர்கள் எப்படி உயிரிழந்தார்கள் என்று வு ஹுயான் அளித்த விளக்கம் அந்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. மேலும், தனக்கும் அப்படிப்பட்ட சூழ்நிலை நேர்ந்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்த வு, கடைசி முயற்சியாக ஊடகத்தின் வாயிலாக தனது கோரிக்கையை மக்களிடையே முன்வைத்தார்.
அவரது கோரிக்கையின் தீவிரத்தை புரிந்துகொண்ட மக்கள் லட்சக்கணக்கான பணத்தை அவருக்கு நிதியுதவியாக அளித்தனர். ஆனால், கடந்த திங்கட்கிழமை தனது 24ஆவது வயதில் உயிரிழந்த வு ஹுயானுக்கு அந்த நிதியுதவிகள் முழுவதும் கடைசிவரை சென்று சேரவில்லை.
உயிரிழந்த பிறகும் இளம்பெண்ணுக்கு கிடைக்காத நிதியுதவிபடத்தின் காப்புரிமைWEIBO
அதாவது, வு ஹுயானுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவியில் சிறிய தொகை மட்டுமே அவர் உயிரிழப்பதற்கு முன்பு அவரை சென்றடைந்துள்ளதாக இப்போது தெரியவந்துள்ளது. வு ஹுயானுக்கு நிதியுதவியாக சுமார் ஒரு கோடி ரூபாய் குவிந்திருந்த சூழ்நிலையில், அவரது மருத்துவமனை செலவுக்கு இந்திய மதிப்பில் வெறும் இரண்டு லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
இவ்வளவு பணம் திரட்டப்பட்டும் வு உயிரிழந்ததற்கு யார் காரணம் என்ற கேள்வி சீனாவில் பலரது மனதை துளைத்து வருகிறது.


வெறும் 135 சென்டிமீட்டர் உயரம் கொண்ட வு ஹுயானின் புகைப்படங்கள் முதல் முறையாக கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டன. மனநலம் பாதிக்கப்பட்ட தனது சகோதரருடன் வசித்து வந்த வு, தனது மாமா - அத்தை மாதாமாதம் கொடுத்துவந்த 300 யுவான்களையே (சுமார் 3,100 ரூபாய்) நம்பி வாழ்ந்து வந்தார்.
இதில், தனது சகோதரரின் மருத்துவ செலவுக்கு அடுத்து மீதமுள்ள பணத்தில் ஒரு நாளைக்கு இரண்டு யுவான்கள் அதாவது ஒருநாள் உணவுக்கு வெறும் 20 ரூபாயே வுவிடம் மிஞ்சியது.
  • குடிசை வீட்டிலிரு
வுவின் பின்னணி குறித்த தகவல்கள் வெளிவந்த உடனேயே அவருக்கு மக்கள் நிதியுதவி அளிக்க தொடங்கினர். சீனாவின் அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளையின் (சி.சி.ஏ.எஃப்.சி) கீழ் உள்ள 'சாரிட்டி 9958' என்ற திட்டத்தின் கீழ் வுவின் இதய அறுவை சிகிச்சைக்கு நிதி இருவேறு தளங்களின் வாயிலாக திரட்டப்பட்டது.
ஆனால், வு ஹுயானுக்கு கடைசிவரை அந்த அறுவை சிகிச்சை நடைபெறவே இல்லை. வு உயிரிழக்கும்போது அவர் 30 கிலோ எடைக்கும் குறைவாகவே இருந்ததாகவும், அதன் காரணமாகவே அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உடனடியாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள்

வு உயிரிழந்த சில நாட்களிலேயே இதுதொடர்பாக ஒரு மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டு வெளிவர தொடங்கியது. சீன அரசு ஊடகமான 'தி கவர்', வு ஹுயானுக்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்ட 'சாரிட்டி 9958' அறக்கட்டளையில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடப்பதாக தெரிவித்தது.
இந்நிலையில், 9958 அறக்கட்டளையின் முன்னாள் ஊழியரும், செயற்பாட்டாளருமான ஜெங் ஹெஹோங், இந்த அறக்கட்டளை நோயால் அவதிப்படும் அல்லது எளிதில் ஏமாற்றப்பட்ட கூடிய நபர்களுக்காக திரட்டப்படும் பணத்தை சரிவர கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
"நோயாளி இறக்கும் வரை அவருக்காக திரட்டப்பட்ட பணத்தில் இருந்து வட்டியை பெறுவதற்கு 9958 அறக்கட்டளை திட்டமிட்டு செயலாற்றுகிறது. இவ்வாறாக வரும் வட்டி, சட்டப்படி ஊழியர்களுக்கு ஊக்க தொகையாக கொடுக்கப்பட்டு வருகிறது" என்று அவர் கூறுவதாக Ifeng.com என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
உயிரிழந்த பிறகும் இளம்பெண்ணுக்கு கிடைக்காத நிதியுதவிபடத்தின் காப்புரிமைPEAR VIDEO
இருப்பினும், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கும் அந்த அறக்கட்டளை, வுவின் குடும்பத்தினர் முன்வைத்த கோரிக்கையின் படியே தாங்கள் பணத்தை வழங்காமல் நிறுத்தி வைத்ததாக தெரிவித்துள்ளது. மேலும், அறுவை சிகிச்சை செய்வதற்குரிய உடல் நிலை சார்ந்த தகுதியை, வு கடைசி வரை எட்டவே இல்லை சாரிட்டி 9958 விளக்கம் அளித்துள்ளது.
இருப்பினும், கடைசி வரை தனக்காக நிதியுதவி சேர்ந்துள்ளது குறித்து வு ஹுயானுக்கு தெரியவே தெரியாது என்று அவரது நெருங்கிய வட்டத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி, வு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தேவையான மருத்துவ உதவியை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக உள்ளூர் அரசாங்கம் தெரிவித்ததையடுத்தே நிதியுதவி பெறுவதை தாங்கள் நிறுத்தி வைத்ததாக 9958 அறக்கட்டளை மேலும் விளக்கம் அளித்துள்ளது.
ஆனால், பணத்தை வழங்காமல் நிறுத்தி வைப்பது உள்பட இந்த விவகாரம் தொடர்பாக தாங்கள் 9958 அறக்கட்டளையை தொடர்புகொள்ளவே இல்லை என்று உள்ளூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இருதரப்பினரின் விளக்கங்களை மட்டும் பார்த்து முடிவுக்கு வரும் அளவுக்கு இந்த விவகாரம் அவ்வளவு சாதாரணமானது அல்ல என்று கூறுகிறார் சீனாவை சேர்ந்த செய்தியாளர் டேவிட் பால்க்.
9958 அறக்கட்டளை போன்று சீனாவில் உள்ள பல்வேறு அறக்கட்டளைகள் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி அதன் மூலம் நிதி திரட்டுவதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் விளக்கியுள்ளார்.